ADDED : ஜூலை 29, 2026 07:42 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் கஞ்சா விற்ற தந்தை, மகன் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
உருளையன்பேட்டை குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் நெல்லித்தோப்பு மார்க்கெட் பகுதியில், ரோந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும், இரு நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர். அப்போது, அதில் ஒருவரின் பேண்ட்டில் இருந்து, பிளாஸ்டிக் பாக்கெட் ஒன்று கீழே விழுந்தது.
பாக்கெட்டை போலீசார் பிரித்து பார்த்தபோது, அதில், கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவர்களை விரட்டி சென்ற போலீசார் நெல்லித்தோப்பு வில்லியனுார் சாலையில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த போது, பிடித்து சோதனை செய்தனர்.
அவர்கள் 96 கிராம் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள், நெல்லித்தோப்பு வேல்ராஜ், 63; அவரது மகன் ஆகாஷ்,27, ஆகியோர் என்பதும், அவர்கள் சண்முகாபுரம் ரமேஷ் மகன் சரண், 22, என்பவரிடம் கஞ்சா வாங்கி வந்து விற்றதும் தெரியவந்தது.
மூவர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.
