ADDED : மே 25, 2026 08:21 PM
வடலுார்: வடலுார் தருமச்சாலை துவக்க விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
கடலுார் மாவட்டம், வடலுாரில், கடந்த 1867ல் தருமச்சாலையை வள்ளலுார் என்கிற ராமலிங்க அடிகளார் நிறுவினார். அன்று தொடங்கி இன்று வரை வடலுாரில் அணையா அடுப்பு மூலம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. தருமச்சாலையின் 160வது ஆண்டு விழா நேற்று காலை சன்மார்க்கக் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி காலை, 5:00 மணிக்கு அகவல் பாராயணம் நடந்தது. தொடர்ந்து சீர்காழி சிவசிதம்பரம் கலந்து கொண்ட திருஅருட்பா இன்னிசை நிகழ்ச்சி, தருமச்சாலை சிறப்பு குறித்த வில்லுப்பாட்டு இசை நிகழ்ச்சி, ஜீவகாருண்ய ஒழுக்கம் சத்விசாரம், சொற்பொழிவு, ஆறாம் திருமுறை, சன்மார்க்க நெறி, நான்கு வகை ஒழுக்கம், வள்ளலார் அருளிய ஞானசரியை ஆகியவை குறித்த சத்விசாரம் என, நிகழ்ச்சிகள் நடந்தன.
விழாவையொட்டி முன்னதாக கடந்த 18ம் தேதி முதல் தருமச்சாலையில் அருட்பெருஞ்ஜோதி மகா மந்திர பாராயணம், 21 ம் தேதி முதல் சத்திய ஞான சபையில் திருஅருட்பா முற்றோதல், தருமச்சாலை மேடையில் திருஅருட்பா இன்னிசை, வில்லுப்பாட்டு நடந்தன.
திருஅருட்பா இசை விழா தருமச்சாலை துவக்க விழாவை முன்னிட்டு, 41வது ஆண்டு திருஅருட்பா இசை விழா வடலுார் பெருவெளியில் நேற்று காலை துவங்கியது. இன்றும், நாளையும் என, 3 நாட்கள் நடைபெறும் இசை விழாவில் ஏராளமான பிரபல பாடகர்கள், இசை மற்றும் வாத்திய கலைஞர்கள் திருஅருட்பா பாடல்களை பாடுகின்றனர். விழா ஏற்பாடுகளை வடலுார் திருஅருட்பா இசை சங்கம், வள்ளலார் தெய்வ நிலையம், சன்மார்க்க அன்பர்கள் இணைந்து செய்துள்ளனர். விழாவையொட்டி வடலுார் சத்திய ஞான சபை, தருமச்சாலை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வடலுார் விழாக்கோலமாக காணப்படுகிறது.
