/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பழைய நாணயங்களுக்கு பணம் தருவதாக மோசடி
/
பழைய நாணயங்களுக்கு பணம் தருவதாக மோசடி
ADDED : மே 29, 2024 05:16 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் பழைய நாணயங்களுக்கு பணம் கொடுப்பதாக கூறி மோசடி செய்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, நெட்டப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவர், பேஸ்புக்கில் பழைய நாணயங்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பான விளம்பரத்தை பார்த்தார். பின், அதில் இருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார்.
எதிர்முனையில் பேசியவர் பழைய நாணயங்களை கொடுத்து பணம் பெறுவதற்கு முதலில் ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும் என, கூறினார். இதை நம்பிய குப்புசாமி 50 ஆயிரத்து 300 ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.
இதேபோல் அரியாங்குப்பத்தைச் சேர்ந்த ராகவன் என்பவரிடம் தொடர்பு கொண்ட மர்ம நபர் தங்கம் சேமிக்கும் திட்டத்தில் சேருமாறு கூறினார். இதனை நம்பி ராகவன் 8,500 ரூபாய் அனுப்பி ஏமாந்துள்ளார்.
காரைக்கால் சேர்ந்த ஜோதிபாஸ் ஆன்லைனின் அலங்கார பொருட்கள் வாங்க 35 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார். கிரெடிட் கார்டு மூலம், தேங்காய்திட்டு திலகர் நகரைச் சேர்ந்த சந்தோஷிடம் ரூ. 7,600, தட்டாஞ்சாவடியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரிடம் ரூ. 17 ஆயிரம், விழுப்புரத்தைச் சேர்ந்த குமரன் என்பவரிடம் ரூ. 15 ஆயிரம் என அவர்களின் வங்கி கணக்கில் மோசடியாக பணம் எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.