ADDED : மார் 05, 2025 04:43 AM

காரைக்கால்: காரைக்காலில் நீட் மற்றும் அரசு பணிக்கான போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் நீட் தேர்வு மற்றும் அரசு பணிக்கான போட்டி தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகளை அரசு சார்பில் தொடங்குவது குறித்து கலெக்டர் சோம சேகர் அப்பாராவ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் நீட், ஜே.இ.இ., தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகளும், புதுச்சேரி அரசு சார்பில் 256 உதவியாளர் பணிக்கு ஏப்., மாதம் நடக்கும் போட்டி தேர்வுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
இனி வரும் காலத்தில் அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ச்சியான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், துணை கலெக்டர் அர்ஜூன் ராமகிருஷ்ணன், முதன்மை கல்வி அதிகாரி விஜய மோகனா, கலெக்டர் செயலர் பொன் பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
