ADDED : மே 25, 2026 10:24 PM
புதுச்சேரி: இளைஞர் அமைதி மையம் சார்பில் மாணவர்களுக்கான இலவச நல்லொழுக்கப் பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.
இது குறித்து நிறுவுநர் எழுத்தாளர் அரிமதி இளம்பரிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
இளைஞர் அமைதி மையம் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருதி இலவச நல்லொழுக்கம் மற்றும் மனித வள மேம்பாட்டுப் பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறது. இந்த கல்வியாண்டிற்கான முகாம்கள் அந்தந்தப் பள்ளிகளில் நடத்தப்பட உள்ளன. பெற்றோர்களை மதித்தல், நேர்மறை எண்ணங்கள், தன்னம்பிக்கை, உயர்கல்வி, மாநில மற்றும் மத்திய அரசுகள் நடத்தும் போட்டித்தேர்வுகளை எழுதும் முறைகள், சுயக்கட்டுப்பாடு.
ஒழுக்க மேலாண்மை, மனித வளம், சமூக ஊடகங்களை கையாளும் முறைகள், வாசிப்புப் பழக்கம், பேச்சாற்றலை வளர்த்துக் கொள்ளும் முறைகள், மது,போதைப் பழக்கங்களினால் ஏற்படும் மனம் மற்றும் உடல் நலப் பாதிப்புகள், திரைக்கவர்ச்சிகளிலிருந்து விடுபடுதல், மன அமைதி, சுதந்திரப் போராட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள், நாட்டுப் பற்று மற்றும் தலைமைப் பண்புகள் உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படும்.
விருப்பம் உள்ள பள்ளி முதல்வர்களும், உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் இளைஞர் அமைதி மையம், எண்–72, முதல் குறுக்குத் தெரு, ஆனந்தரங்கப் பிள்ளை நகர், புதுச்சேரி என்ற முகவரியில் ஜூன் 20ம் தேதிக்குள் தொடர்பு கொண்டு பதிவுச் செய்துக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
