அரசின் செயல்பாட்டிற்கு கவர்னர் நற்சான்று வெங்கடேசன் எம்.எல்.ஏ., பாராட்டு
அரசின் செயல்பாட்டிற்கு கவர்னர் நற்சான்று வெங்கடேசன் எம்.எல்.ஏ., பாராட்டு
ADDED : மார் 12, 2025 06:35 AM

புதுச்சேரி: கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., பேசியதாவது:
மாநில மக்களின் தேவைகளை நிறைவேற்றி வரும் அரசை பாராட்டும் வகையில் கவர்னர் தனது உரையை சட்டசபையில் சமர்பித்துள்ளார்.
பெஞ்சல் புயல் நிவாரண நிதி மிக விரைவாக மக்களை சென்றடைந்துள்ளது. புதிதாக 236 தொழிற்சாலைகள் கொண்டு வந்து 11 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். பிரதமர் பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ள முதியோர்களுக்கான இலவச காப்பீட்டு திட்டத்தில், 7,600 பேர் பயன் பெற்றுள்ளனர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 60 கோடி ரூபாய் செலவில் இலவச லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. ரூ. 111 கோடி செலவில் கோவில்கள் புனரமைக்கப்பட உள்ளது. ரூ.17 கோடி செலவில் 38 புதிய பஸ்கள் இயக்கவும், ஏற்கனவே உள்ள 15 பழைய பஸ்கள் சீரமைக்கப்பட உள்ளது.
புதுச்சேரியின் பிரதான பிரச்னையான போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மத்திய அரசின் நிதியுதவியுடன் ராஜிவ் மற்றும் இந்திரா சதுக்கங்களிடையே மேம்பாலம் மற்றும் கடலுார் சாலையை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. நடப்பாண்டில் ரூ. 8,467 கோடி செலவில் மக்கள் நலப் பணித்திட்டங்கள் நடக்க உள்ளததையும், விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கான அடிப்படை வசதிகளை அரசு செய்து வருவதை பாராட்டியுள்ளார்.
பொது போக்குவரத்தை கண்காணித்து சீரமைத்திட ரூ.100 கோடி செலவில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படும் திட்டத்தை பாராட்டியுள்ளார்.
சேதராப்பட்டில் ஐடி பூங்கா மற்றும் பார்மா உள்ளிட்ட தொழில் சாலைகள், ஏ.எப்.டி., வளாகத்தில் ஐ.டி., பார்க், டெக்ஸ்டைல் பார்க், வணிக மையங்கள் அமைப்பது என, மக்கள் தேவைகளை அறிந்து அரசு செயல்பட்டு வருவதை கவர்னர் பாராட்டியுள்ளதை வரவேற்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
