/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஊசுட்டேரி, பாகூர் ஏரியில் கவர்னர் திடீர் ஆய்வு
/
ஊசுட்டேரி, பாகூர் ஏரியில் கவர்னர் திடீர் ஆய்வு
ADDED : ஆக 12, 2024 05:12 AM

புதுச்சேரி: புதுச்சேரி கவர்னர் கைலாஷ் நாதன், ஊசுட்டேரி மற்றும் பாகூர் ஏரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி புதிய கவர்னர் கைலாஷ்நாதன் நேற்று காலை முதல் முறையாக, வில்லியனுார் அருகே உள்ள ஊசுட்டேரிக்கு சென்று ஆய்வு செய்தார். அவரை அமைச்சர் சாய் சரவணன் குமார், பூரண கும்ப மரியாதை கொடுத்து, வரவேற்றார்.
ஊசுட்டேரியை பார்வையிட்ட கவர்னரிடம், அமைச்சர் சாய் சரவணன் குமார் ஏரியின் கொள்ளளவு, அதன் பரப்பளவு, பறவைகளின் வருகை மற்றும் ஏரியின் பழைய வரலாறு குறித்து விளக்கினார்.
அப்போது அவரிடம் கவர்னர், 'ஏரியை பராமரிப்பது இல்லையா..' என, கேள்வி எழுப்பினார்.
அதற்கு அமைச்சர் 'ஏரியை வனத்துறை, பொதுப்பணித்துறை, நீர்ப்பாசன கோட்டம் ஆகிய துறைகள் பராமரிக்க வேண்டும். ஆனால் அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு, பராமரிக்காமல் உள்ளனர்' என அதிகாரிகள் மீது குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து, பொதுப்பணித்துறை தலைமைப்பொறியாளர் தீனதயாளன், ஏரியின் வரைபடத்தை காண்பித்து, ஏரிக்கு தண்ணீர் வரும் வழிகள் மற்றும் இதுவரை எத்தனை முறை நிரம்பி உள்ளது என்பது குறித்து விளக்கினார்.
மேலும் ஏரி மூலம் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள், விவசாயிகளின் நலன், அங்கிருந்து நகரப்பகுதிகளில், குடிநீர் எடுத்து செல்லும் விதம் பற்றி விளக்கினார்.
கவர்னர் கைலாஷ்நாதன் கூறுகையில், 'ஊசுட்டேரியில் இருந்து குடிநீர் எடுத்து செல்வது சம்மந்தமாக ஆய்வு செய்ய வந்தேன். நான் வந்து இரண்டு நாட்கள் தான் ஆகிறது. ஆகையால் இது குறித்து முழுமையாக நான் தெரிந்து கொண்ட பின்பு தான், மேற்கொண்டு எந்த நடவடிக்கையாக இருந்தாலும் எடுக்க முடியும்' என்றார்.
ஆய்வின் போது, பொதுப் பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் வீரச்செல்வன், செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், கொம்யூன் பஞ்சாயத்து உதவி பொறியாளர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.போலீஸ் எஸ்.பி.,க்கள் வம்சித ரெட்டி, மோகன் குமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பாகூர் ஏரியை கவர்னர் ஆய்வு செய்தார். அவரிடம் பாகூர் ஏரியின் பரப்பு, கொள்ளளவு, நீர் பிடிப்பு விவரங்கள், நீர்ப்பாசனம், குடிநீர் திட்டம் பற்றி அதிகாரிகள் எடுத்துக்கூறினர்.
இதனிடையே, கவர்னரிடம், பாகூர் ஏரிக்கரை வீதி பொது மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அதில், பாகூர் ஏரிக்கரை வீதியில் இயங்கி வரும் சாராயக்கடை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை விடுத்திருந்தனர்.

