ராஜினாமா எம்.எல்.ஏ.,க்களை த.வெ.க.,வில் சேர்த்தது ஏற்புடையதல்ல: மா.கம்யூ., பாலகிருஷ்ணன்
ராஜினாமா எம்.எல்.ஏ.,க்களை த.வெ.க.,வில் சேர்த்தது ஏற்புடையதல்ல: மா.கம்யூ., பாலகிருஷ்ணன்
ADDED : மே 27, 2026 08:41 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் மா.கம்யூ., கட்சியின் மாநில பொதுக்குழுக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
மாநில செயலர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், தலைமைக் குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின், பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேர்தலுக்கு முன்பும், பின்பும் அ.தி.மு.க.,வில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது. ஆதரவு கேட்கும் முன்பே 25 எம்.எல்.ஏ.,க்கள் த.வெ.க.,வுக்கு ஆதரவு அளித்துள்ளனர். மேலும், 4 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்த 5 நிமிடங்களில் த.வெ.க.வில் சேர்க்கப்பட்டுள்ளனர். முன்னேற்பாடுகள் இல்லாமல் இந்த செயல்கள் நடக்காது.
ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், ஜனாதிபதி ஆட்சி தமிழகத்தில் அமலாகக் கூடாது என்பதற்காக வெளியில் இருந்து மா.கம்யூ. ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் 4 பேர் ராஜினாமா செய்தவுடன் த.வெ.க.வில் சேர்ந்தது குதிரை பேரத்திற்கு வழியாக இருக்குமோ என்ற சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. த.வெ.க.,வின் இந்த அணுகுமுறை ஏற்புடையதல்ல.
புதுச்சேரியில் தேர்தல் நேரத்தில் இண்டி கூட்டணியில் தொகுதி பங்கீடு கட்டமைப்பதில் தி.மு.க.,வும், காங்.,கட்சியும் இணக்கமற்ற முறையில் செயல்பட்டன. அதனால் தான் இண்டி கூட்டணி பின்னடைவைச் சந்தித்தது. கடந்த முறை புதுச்சேரியில் போலி மருந்து ஊழல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மோசமான ஆட்சியை நடத்திய என்.ஆர்.காங்., – பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. ஆட்சிக்கு வந்தும் இன்னும் முழுமையான அமைச்சரவையை அமைக்காமல், அந்த கூட்டணிக்குள் போட்டி நிலவுகிறது’ என்றார்.
