ADDED : ஆக 04, 2024 04:26 AM
வில்லியனுார்: வில்லியனுாரில் நடந்து சென்ற மூதாட்டியின் கம்மலை பறித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
வில்லியனுார் புதுபேட் பகுதியைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி, 70. இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. முத்துலட்சுமி மட்டும் தனியாக வசிக்கிறார்.
வீட்டு வேலை செய்து வரும் முத்துலட்சுமி, நேற்று மாலை தில்லை நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். பின் தொடர்ந்து பைக்கில் வந்த மர்ம நபர், முத்துலட்சமி காதில் அணிந்திருந்த நகையை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார்.
இதில் முத்துலட்சுமியின் காது கிழிந்து ரத்தம் சொட்டியது. காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இது குறித்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, நகையை பறித்துச் சென்ற நபரை தேடி வருகின்றனர்.