/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி கவர்னராக கைலாஷ்நாதன் பதவியேற்பு
/
புதுச்சேரி கவர்னராக கைலாஷ்நாதன் பதவியேற்பு
ADDED : ஆக 08, 2024 12:49 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் கவர்னராக இருந்த ராதாகிருஷ்ணன், மஹாராஷ்டிராவிற்கு மாற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து, கேரளாவைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி கைலாஷ்நாதன், புதுச்சேரி கவர்னராக நியமிக்கப்பட்டார். நேற்று காலை, புதுச்சேரி கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடந்தது.
தலைமை செயலர் சரத் சவுகான், புதிய கவர்னர் கைலாஷ்நாதன் நியமிக்கப்பட்டதற்கான ஜனாதிபதி உத்தரவை வாசித்தார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பு கிருஷ்ணகுமார், புதிய கவர்னருக்கு பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
போலீசாரின் வரவேற்பு மரியாதை ஏற்று கொண்ட புதிய கவர்னருக்கு, முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
கவர்னராக பொறுப்பேற்றதும், முதல் கையெழுத்தாக முதியோர், விதவை, முதிர்கன்னிகள், மூன்றாம் பாலினத்தவருக்கான மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கான கோப்பில் கவர்னர் கையெழுத்திட்டார்.
ஊட்டியில் வளர்ந்தவர்
புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன், 1953 மே 25ம் தேதி கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், வடகரையில் பிறந்தவர். சென்னை பல்கலையில் எம்.எஸ்சி., வேதியியல், பிரிட்டனின் வேல்ஸ் பல்கலையில், எம்.ஏ., பொருளாதாரம் படித்தவர். இவரது தந்தை அஞ்சல் துறையில் தமிழகத்தின் ஊட்டியில் பணிபுரிந்தார். அதனால் அவர் அந்த பகுதியில் தான் வளர்ந்தார்.
கடந்த, 1979ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தேர்வான கைலாஷ்நாதன், குஜராத்தில், 1981ம் ஆண்டில், உதவி கலெக்டராக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து கலெக்டர் உள்ளிட்ட, பல்வேறு பதவிகளில் பணியாற்றிய இவர், பிரதமர் மோடி, குஜராத் மாநிலத்தில் முதல்வராக இருந்த போது, 2013-14ம் ஆண்டு முதன்மை அரசு செயலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.
அதன் பிறகும், கடந்த ஜூன் மாதம் வரை குஜராத்தில் முதன்மை செயலராக தொடர்ந்து பணியாற்றினார்.