ADDED : ஆக 04, 2026 05:01 PM
திருக்கனுார்: சோரப்பட்டில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருக்கனுார் அடுத்த சோரப்பட்டு கருமாதி கொட்டகை அருகே அவ்வழியாக செல்லும் பொது மக்களை வாலிபர் ஒருவர் போதையில் கத்தியை காட்டி மிரட்டி வருவதாக திருக்கனுார் போலீசாருக்கு தகவல் வந்தது.
தகவலறிந்த, சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கத்தியுடன் பொதுமக்களை மிரட்டி கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், சகடப்பட்டு, வெங்கட்டா நகர், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த முத்கையன் மகன் சிவராமகிருஷ்ணன், 34; என்பது தெரியவந்தது.
பின், அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நேற்று காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
