அஞ்சலக விபத்து காப்பீடு திட்டத்தில் மருத்துவ செலவு தொகை வழங்கல்
அஞ்சலக விபத்து காப்பீடு திட்டத்தில் மருத்துவ செலவு தொகை வழங்கல்
ADDED : மே 14, 2026 06:53 PM
புதுச்சேரி: விபத்தில் சிக்கியவருக்கு அஞ்சலக விபத்து காப்பீடு ரூ.799 திட்டத்தில் மருத்துவ செலவு தொகையாக ரூ.85 ஆயிரத்து 899 வழங்கப்பட்டது.
இதுகுறித்து பாண்டிச்சேரி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் இனகொல்லு காவ்யா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
இந்திய அஞ்சல் துறையும், இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியும் இணைந்து குறைந்த தொகையில் விபத்து காப்பீடு திட்டத்தை வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் கடலுார், காரணப்பட்டு, விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த டிரைவர் சுரேஷ், ரூ. 799 செலுத்தி இணைந்தார்.
இந்நிலையில், இவர், அரியாங்குப்பத்தில் பைக்கில் சென்றபோது, விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அவருக்கு, விபத்து காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவ செலவு தொகையாக ரூ.85 ஆயிரத்து 899க்கான காசோலையை இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியின் பாண்டிச்சேரி கிளை மேலாளர் வினோத் குமார், உறவுமுறை நிர்வாகி செல்வம் ஆகியோர் வழங்கினர்.
எதிர்பாராத விபத்துகளால் ஏற்படும் செலவுகள், பகுதி ஊனம், நிரந்தர ஊனம் மற்றும் உயிரிழப்பு அனைத்திற்கும் பயனளிக்கக்கூடிய விபத்து காப்பீடு திட்டத்தை அஞ்சல் துறை, இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி வழியாக வழங்குகிறது. இத்திட்டத்தில் 18 முதல் 65 வயதிற்குட்பட்ட அனைவரும் இணையலாம். ஆதார் கார்டு, பான் கார்டு, மொபைல் எண், வாரிசுதாரரின் விவரங்கள் போதுமானது. இதில், ரூ.320க்கு 5 லட்சம், ரூ.559க்கு 10 லட்சம், ரூ.799க்கு 15 லட்சம் என்ற வகைகளில் விபத்து காப்பீடு திட்டத்தில் இணையலாம்.
புதுச்சேரியில் உள்ள அனைத்து அஞ்சலகங்களில் இத்திட்டத்தில் சேரலாம். மேலும், விவரங்களுக்கு தலைமை அஞ்சல் அலுவலகம், அனைத்து அஞ்சலங்கள் மற்றும் 99520 53573 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
