பிக் பார்ம் சான்றிதழ் நடைமுறையை அமல்படுத்த எம்.எல்.ஏ., கோரிக்கை
பிக் பார்ம் சான்றிதழ் நடைமுறையை அமல்படுத்த எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : மே 19, 2026 07:00 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் குடியிருப்பு, வருமானம், சாதி அடங்கிய பிக் பார்ம் சான்றிதழ் வழங்கும் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டுமென செந்தில்குமார் எம்.எல்.ஏ., கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரியில் மாணவர்கள் நீட் அல்லாத பாடப்பிரிவுகளில் சேர்வதற்கு குடியிருப்பு, சாதி, வருமானம், குடியுரிமை போன்ற சான்றிதழ்களுடன் சென்டாக்கில் வரும் 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக கிராம நிர்வாக அதிகாரிகள், தற்போது துவங்கப்பட்டுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால், மாணவர்கள், பெற்றோர்கள் சான்றிதழ் பெறுவதற்கு சிரமப்பட்டு வருகின்றனர்.
ஆகையால், மாணவர்கள் சான்றிதழ்களை உடனடியாக பெறுவதற்கு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு முகாம்கள் அமைக்க வேண்டும். மேலும், கடந்த காலங்களில் 8 ம் வகுப்பு முதல் கல்லுாரி வரை செல்லத்தக்க குடியிருப்பு, வருமானம், சாதி, குடியுரிமை அடங்கிய பிக் பார்ம்(நிரந்தர சான்றிதழ்) வழங்கும் நடைமுறை தற்போது தடைப்பட்டுள்ளது.
ஆகையால், பிக் பார்ம் சான்றிதழ் வழங்கும் பணியினை மீண்டும் துவங்கவும், ஓராண்டுக்கு செல்லத்தக்க சாதி, குடியுரிமை, குடியிருப்பு, வருமானம் சான்றிதழ் வழங்கவும் ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
