ADDED : ஜூன் 09, 2024 02:24 AM
திட்டக்குடி, : வழக்கறிஞர் மற்றும் ஆசிரியர் கண்ணில் ஸ்பிரே அடித்துவிட்டு, சரமாரியாக தாக்கிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திட்டக்குடி கண்ணபிரான் தெருவை சேர்ந்தவர் பத்மராஜா,37; சிறுமுளை அரசு பள்ளியில் பகுதிநேர ஆசிரியராக பணிபுரிகிறார்.
இவர், நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு, திட்டக்குடி சார் பதிவாளர் அலுவலகம் அருகே, தனது நண்பர்களான வழக்கறிஞர் பாரத்,35; தனியார் நிதி நிறுவன ஊழியர் பிரேம்ராஜ், 32, ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தடைப்பட்டது.
சற்று நேரத்தில் அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல், பத்மராஜா மற்றும் அவரது நண்பர்கள் கண்ணில் எரிச்சல் ஏற்படுத்தும் ஸ்பிரேவை அடித்து, சரமாரியாக தாக்கினர்.
இதில் தலையில் காயமடைந்த பத்மராஜா, பாரத், சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். திட்டக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
