ADDED : ஆக 05, 2026 11:51 PM
புதுச்சேரி: புதுச்சேரியை தொடர்ந்து, தமிழகத்தில் கால் பதிக்க என்.ஆர்.காங்., தயாராகி வருகிறது.
பா.ம.க.,வில், ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் வெடித்து, இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு, கடந்த சட்டசபை தேர்தலை சந்தித்தனர். இதில், சேலம் பா.ம.க., முன்னாள் எம்.எல்.ஏ., அருள், ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.,வில், இயங்கி வந்தார். இந்நிலையில், அன்புமணி தனது குடும்பத்தினருடன், ராமதாசை சந்தித்தார். பின் ராமதாஸ் அரசியில் துறவறம் பூனுவதாகவும், பா.ம.க., இனி அன்புமணி தலைமையில் செயல்படும் என அறிவித்தார்.
இந்த அறிவிப்பால், ராமதாஸ் அணியில் இருந்த சிலர் அதிருப்தி அடைந்தனர். இதற்கிடையில், ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி, பேரன் முகுந்தன் ஆகியோர் புதுச்சேரி முதல்வரும், என்.ஆர்.காங்., தலைவருமான ரங்கசாமியை சந்தித்தனர்.
அதன் தொடர்ச்சியாக சேலம் முன்னாள் எம்.எல்.ஏ., அருள், முதல்வர் ரங்கசாமி பிறந்த நாளையொட்டி, நேற்று முன்தினம் தனது ஆதரவளார்களுடன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட அவர் நேராக என்.ஆர்.காங்., தலைமை அலுவலகம் வந்தார். அங்கு நிர்வாகிகளிடம் பேசிக்கொண்டிந்த முன்னாள் அமைச்சர் லட்சுமிநாராயணனை சந்தித்தார். அங்கு இருவரும் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர். வரும் 9ம் தேதி சென்னையில் நடக்கும் காமராஜர் விழாவில், இதில் புதுச்சேரி அமைச்சர்கள் கலந்து கொள்வது குறித்தும், ஆலோசித்தனர்.
இவ்விழாவிற்கு பின், அருள் தலைமையில், பா.ம.க., முன்னாள் மாவட்ட செயலர்கள் 18 பேர் மற்றும் மாற்றுக்கட்சியை சேர்ந்த முக்கிய பிரபலங்களும், என்.ஆர்.காங்., கட்சியில் இணைய உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதையடுத்து, என்.ஆர்.காங்., கட்சி தமிழகத்தில், வலுவாக களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
