நியமன எம்.எல்.ஏ., விவகாரத்தில் பா.ஜ., மீது என்.ஆர்.காங்., அதிருப்தி
நியமன எம்.எல்.ஏ., விவகாரத்தில் பா.ஜ., மீது என்.ஆர்.காங்., அதிருப்தி
ADDED : மே 23, 2026 11:50 PM
புதுச்சேரி சட்டசபை தேர்தல் களம் முடிந்து, தேசிய ஜனநாய கூட்டணி மீண்டும் ஆட்சியில் பொறுப்பேற்றுக்கொண்டது. முதல்வராக ரங்கசாமி பதவி ஏற்றுக்கொண்டார். இது தவிர என்.ஆர்.காங்., தரப்பில் மல்லாடிகிருஷ்ணராவ், பா.ஜ., தரப்பில் நமச்சிவாயம் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இருப்பினும் இரு கட்சிகள் இடையே நியமன எம்.எல்.ஏ., விவகாரத்தில் தெளிவான முடிவு எட்டாமல் புகைந்து வருகின்றது.
தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது, என்.ஆர்.காங்., தலைவரான முதல்வர் ரங்கசாமியும், பா.ஜ.,வின் தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் தனியாகச் சந்தித்துப் பேசினர். அப்போது, எதிர்கால ஆட்சி அதிகாரம் குறித்து சில முக்கிய நிபந்தனைகளும், ஒப்பந்தங்களும் இருதரப்பிலும் விவாதிக்கப்பட்டன.
அதில், முக்கிய அம்சமாக புதுச்சேரி அமைச்சரவையில் என்.ஆர்.காங்., மற்றும் பா.ஜ., ஆகிய இரு கட்சிகள் மட்டுமே இடம் பெற வேண்டும். மூன்று நியமன எம்.எல்.ஏ., பதவிகளில், ஒன்றை என்.ஆர்.காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும். ராஜ்யசபா எம்.பி., சீட்டை என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு வழங்க வேண்டும். இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் ஒரு முறையான ஒப்பந்தக் கடிதம் தயார் செய்யப்பட்டது.
கடந்த 31.03.2026 அன்று என்.ஆர்.காங்., மாநில பொதுச் செயலாளர் ஜெயபால், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து இக் கடிதத்தை முறைப்படி வழங்கினார். மேலும், இதன் நகல் புதுச்சேரி மாநில பா.ஜ., தலைவர் ராமலிங்கத்திடமும் ஒப்படைக்கப்பட்டது.
தேர்தல் முடிந்து நாட்கள் நகர்ந்துகொண்டே போகும் சூழலில், இந்த ஒப்பந்தக் கடிதத்தின் மீது பா.ஜ., தலைமை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. குறிப்பாக, தங்களுக்குக் கொடுப்பதாக உறுதியளிக்கப்பட்ட ஒரு நியமன எம்.எல்.ஏ., பதவி என்.ஆர்.காங்கிரசுக்குத் தரப்படுமா, இல்லையா என்பது குறித்து பா.ஜ., விடமிருந்து எந்தப் பதிலும் வராதது என்.ஆர்.காங்., கட்சியை யோசிக்க வைத்துள்ளது.
கடந்த முறை மூன்று நியமன எம்.எல்.ஏ.,க்களை பா.ஜ.,வே நியமித்து கொண்டது. 2016 ம் ஆண்டு காங்., ஆட்சி காலத்திலும் நியமன எம்.எல்.ஏ.,க்களை பா.ஜ., நியமித்து கொண்டது. அது போன்று மீண்டும் நியமன எம்.எல்.ஏ.,க்களை பா.ஜ.,வே எடுத்து கொண்டால் என்ன ஆவது என்று என்.ஆர்.காங்., கட்சியின் மூத்த நிர்வாகிகள் அதிருப்தியில் புலம்பி வருகின்றனர்.
புதுச்சேரி அரசியலில் நியமன எம்.எல்.ஏ., க்கள் என்பது வெறும் சம்பிரதாய பதவி மட்டுமல்ல; அது சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கவும், அரசியல் பலத்தைக் கூட்டவும் பயன்படும் ஒரு முக்கிய துருப்புச் சீட்டு.
அப்படிப்பட்ட ஒரு பதவியைக் கூட்டணிக் கட்சிக்கு விட்டுக் கொடுக்காமல், பா.ஜ., தனது பாக்கெட்டிற்குள் மீண்டும் போட்டுக்கொள்ளுகின்றதா என்று தெரியாமல் குழப்பமடைந்துள்ளனர்.
தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை பா.ஜ., கண்டு கொள்ளாமல் மவுனம் காப்பது, என்.ஆர்.காங்., கட்சியினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் வெற்றிக்காக ஒப்பந்தம் போட்டுவிட்டு, இப்போது அதிகாரப் பங்கீட்டின் போது இழுத்தடிப்பது நியாயமில்லை என்பதே என்.ஆர்.காங்கிரசாரின் குமுறலாக இருக்கிறது. இதனால் என்.ஆர்.காங்கிரசார் பா.ஜ., மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
