ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி: 21 பேர் படுகாயம்
ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி: 21 பேர் படுகாயம்
ADDED : மே 08, 2026 10:23 PM
மயிலம்: மயிலம் அடுத்த செண்டூர், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பஸ் கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்தார். 21 பயணிகள் படுகாயமடைந்தனர்.
சென்னையில் இருந்து நேற்று தனியார் ஆம்னி பஸ் திருநெல்வேலி நோக்கி சென்றது. பஸ்சை திருநெல்வேலியை சேர்ந்த மில்டன், 52; ஓட்டினார். மதியம் 12:40 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த செண்டூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலப்பட்டு, தொண்டியாற்று பாலம் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் முன்னால் சென்ற கார் மீது மோதியது.
தொடர்ந்து சாலையின் எதிர் திசையில் சென்னை மார்க்கத்தில் ஓடி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த, பெரம்பலுார் மாவட்டம், குலந்தாநத்தம் கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம் மகன் மகேந்திரன், 35; சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மேலும், கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் சுஜித், 30; காட்வின் ஜோஸ், 27; திருவனந்தபுரம் இஸ்மாயில், 55; சென்னை, வில்லிவாக்கம் செல்வி 54; உட்பட 21 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் டி.எஸ்.பி., பிரகாஷ், மயிலம் இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
