ADDED : மே 06, 2026 07:21 PM
புதுச்சேரி: நிலுவை சம்பளம் வழங்கிடகோரி, பாண்டெக்ஸ் ஊழியர்கள் 8 வது நாளாக பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி பாண்டெக்ஸ் ஊழியர்களுக்கு கடந்த 67 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. நிலுவை சம்பளத்தை வழங்கிட கோரி பல்வேறு போராடங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடந்த 28ம் தேதி முதல் பணிகளை புறக்கணித்து தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, நேற்று 8வது நாளாக பணிகளை புறக்கணித்து, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கூறுகையில், ‘தற்போது, அரசிடமிருந்து மானிய தள்ளுபடியாக 6.50 கோடி ரூபாய் வந்துள்ளது. அதில், 67 மாதம் நிலுவைத் தொகையிலிருந்து, பத்து மாத நிலுவை சம்பளம் வழங்கிட வேண்டும் என தொடர்ந்து வலியறுுத்தி வருகிறோம். இதுவரை எங்களுடைய கோரிக்கை ஏற்கப்படாமல் உள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக பணி செய்து வரும் தங்களுக்கு, 2020ம் ஆண்டு முதல் சம்பளம் வழங்கப்படாமலும், மற்றும் இ.பி.எப்., கட்டப்படாமல் உள்ளது. கடன் பிரச்சனையால் நாங்கள் அவதிப்பட்டு வருகிறோம். உடல்நிலை சரியில்லாமல் குழந்தைகளுக்கு கல்வி கட்டணங்கள் கட்ட முடியாமல் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகிறோம்.
எங்களுக்கு, முதல்கட்டமாக, 10 மாதம் நிலுவை சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். இதில், கவர்னர், கூட்டுறவு செயலாளர், கூட்டுறவு சங்க பதிவாளர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
