ADDED : ஜூலை 14, 2026 07:01 PM
புதுச்சேரி: கைக்கிலப்பட்டில் தனியார் பள்ளி வேன் மோதி, அரசு பள்ளி மாணவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
திருக்கனுார் அடுத்த கைக்கிலப்பட்டு, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமு மகன் அவினேஷ், 16; கூனிச்சம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவர் நேற்று காலை 8:15 மணிக்கு பி.ஒய் 05 வி.டி 0787 ஸ்கூட்டரில் வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். கைக்கிலப்பட்டு குடியிருப்புகளை தாண்டி அவினேஷ் சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு பின்னால் வந்த தனியார் பள்ளி வேன், எதிர்பாராத விதமாக அவரது ஸ்கூட்டர் மீது மோதியது.
அதில், நிலை தடுமாறி கீழே விழுந்த அவினேஷ் தலையில் வேனின் சக்கரம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி இறந்தார். தொடர்ந்து, டிவைர் வேனை சாலையோரம் மாணவர்களுடன் நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்த அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வேனில் இருந்த மாணவர்களை வெளியேறிவிட்டு, விபத்து ஏற்படுத்திய பள்ளி வேனின் அனைத்து கண்ணாடிகளை அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.
தொடர்ந்து, இறந்த மாணவனின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கங்கோரி போலீசார் உடலை எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.பி., பக்தவசலம், இன்ஸ்பெக்டர்கள் ராஜகுமார், செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன், சந்திரசேகர், தமிழரசன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், இறந்த அவினேஷ் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, விபத்தில் இருந்த அவினேஷ் உடலை ஆம்புலன்ஸ் மூலம் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.
கைக்கிலப்பட்டில் தனியார் பள்ளி வேன் மோதி, அரசு பள்ளி பிளஸ் 1 மாணவன் இறந்த சம்பவம் திருக்கனுார் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
