ADDED : ஜூலை 31, 2026 10:30 PM
புதுச்சேரி: மதுபான மொத்த வியாபார கடையில் செக் திருடு போனதாக உரிமையாளர் கொடுத்த புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உருளையன்பேட்டை, கென்னடி கார்டன் பகுதியை சேர்ந்தவர் வீரமணி,55; அதே பகுதியில், மதுபான மொத்த வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம், தனியார் நிறுவன இயக்குனர்களான முருகையன், ரவிக்குமார், பாலாஜி ஆகியோருக்கு வீரமணி தனது மதுபான கடையை குத்தகைக்கு விட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு பின், வியாபாரம் சரியாக நடக்கவில்லை என கூறி, அவர்கள் வீரமணியிடம், கடையை திரும்ப ஒப்படைத்தனர். இருதரப்பும் கணக்கு பார்த்ததில், வீரமணி, நிறுவன இயக்குனர்களில் ஒருவரான பாலாஜிக்கு 23 லட்சம் ரூபாய் தர வேண்டி இருந்தது. பாலாஜி, வீரமணியிடம் பணத்தை திரும்ப தர தொடர்ந்து கேட்டுள்ளார்.
இந்நிலையில், வீரமணியின் மொபைலுக்கு வங்கியில் இருந்து பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்தது. அவர், தனது அலுவலகத்தை சோதனை செய்த போது, செக் ஒன்று காணாமல் போயிருந்தது.
இதையடுத்து, பாலாஜி அவரது அலுவலகத்தில் புகுந்து செக்கை திருடிவிட்டதாக உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
