ADDED : ஜூன் 24, 2026 04:11 PM
புதுச்சேரி: முதலியார்பேட்டையில் வாலிபரை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வேல்ராம்பேட், துலுகாணத்தம்மன் நகரை சேர்ந்தவர் ராஜசேகர் மகன் விக்னேஸ்வரன், 26: கெஸ்ட் அவுஸ் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில், முதலியார்பேட்டை நேருவில் நகரில் வழக்கமாக செல்லும் லாண்டரி கடைக்கு சென்றார். அங்கு இரண்டு பைக்குகள் மோதி விபத்துள்ளானது.
விபத்தில் சிக்கியவர்களை விக்னேஸ்வரன் துாக்கி விட்டு, அடிபட்டுள்ளதா என விசாரித்தார். இது சம்பந்தமாக விக்னேஸ்வரனுக்கும், தேங்காய்திட்டு வடக்கு தெருவை சேர்ந்த மாறன், முகிலன், அஜய் ஆகியோருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மூன்று பேரும் சேர்ந்து, விக்னேஸ்வரனை தாக்கினர்.
தொடர்ந்து மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு தங்கள் பகுதியை சேர்ந்தவர்களை அழைத்தனர். அவர்கள் லாண்டரி கடைக்குள் தஞ்சம் அடைந்த விக்னேஸ்வரனை, உருட்டுகட்டையால் தாக்கி, கத்தியால் வெட்டினர். உடன் அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
