வானவில் சுயமரியாதை இயக்கம் கோரிக்கைகள் வலியுறுத்தி ஊர்வலம்
வானவில் சுயமரியாதை இயக்கம் கோரிக்கைகள் வலியுறுத்தி ஊர்வலம்
ADDED : ஆக 02, 2026 08:20 PM
புதுச்சேரி: புதுச்சேரி வானவில் சுயமரியாதை இயக்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடந்தது.
புதுச்சேரி வெங்கடசுப்பாரெட்டியார் சிலை அருகில் இருந்து நேற்று மாலை 5:00 மணியளவில் ஊர்வலம் துவங்கியது. சகோதரன் சமூக நல மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ஷீத்தல் தலைமை தாங்கினார்.
சமூக நலத்துறை கீழ் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும். பாலின மற்றும் பாலின பன்முகத்தன்மையை மதிக்க வேண்டும். அனைவருக்கும் சம உரிமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அன்பு மற்றும் ஒற்றுமை நிறைந்த புதுச்சேரியை உருவாக்க வேண்டும். மத்திய அரசு பணிகளில் திருநங்கையர் மற்றும் திருநம்பிகள் இடைப்பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஊர்வலம், புஸ்சி வீதி, பழைய சட்டக் கல்லுாரி, பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் வழியாக சென்று அலையான் பிரான்சிஸ் அருகில் நிறைவடைந்தது.
