/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் கொட்டிய மழையால் வெள்ளக்காடாக மாறிய சாலைகள்
/
புதுச்சேரியில் கொட்டிய மழையால் வெள்ளக்காடாக மாறிய சாலைகள்
புதுச்சேரியில் கொட்டிய மழையால் வெள்ளக்காடாக மாறிய சாலைகள்
புதுச்சேரியில் கொட்டிய மழையால் வெள்ளக்காடாக மாறிய சாலைகள்
ADDED : டிச 01, 2024 05:38 AM

புதுச்சேரி, : புதுச்சேரியில் புயல் காரணமாக காலை முதல் பெய்த கன மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக மாறியது. தொடர்ச்சியாக கொட்டிய மழையால் 9 மணி நேரத்தில் 9.58 செ.மீ., மழை பதிவானது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, இறுதியாக பெஞ்சல் புயலாக உருவானது.
வடமேற்கு திசையில் சென்னை நோக்கி நகர்ந்த புயல், நேற்று மாலை நிலவரப்படி புதுச்சேரி -மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும், அப்போது 70 முதல் 90 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனால் புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.
பள்ளி கல்லுாரிகளுக்கு 2 நாட்களுக்கு முன்னரே விடுமுறை அளிக்கப்பட்டது. புதுச்சேரி துறைமுகத்தில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரை சாலைகள் அனைத்தும், பாண்டி மெரினா, பாரதி பூங்க உள்ளிட்ட பூங்காக்கள், படகு குழாம்கள் மூடப்பட்டது.
மீனவர்கள் நேற்று 5வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. படகுகள் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. நேற்று காலை 8:00 மணிக்கு லேசான துாரல் மழை துவங்கியது.
நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக மாறியது. இடைவிடாமல் இரவு வரை மழை வெளுத்து வாங்கியது. காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை 9.56 செ.மீ., மழை பதிவானது. நகர பகுதியில் 10.2 செ.மீ., திருக்கனுாரில் 3.9 செ.மீ., பத்துக்கண்ணு பகுதியில் 9.5 செ.மீ., பாகூரில் 5.2 செ.மீ., மழை பதிவானது.
கடற்கரை சாலை மூடல்
புதுச்சேரி கடல் ஆக்ரோஷமாக கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. அலைகள் 5 முதல் 6 அடி உயரம் வரை எழுந்து பாறைகள் மீது மோதியது. கடற்கரை, பாண்டி மெரினா உள்ளிட்ட பகுதியில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் செல்லாதபடி பேரிகார்டு அமைத்து 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
கடற்கரை வந்த சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். நகரின் பெரும்பலான கடைகள் அனைத்தும் மூடப்பட்டு கிடந்தது.
முகாம்களில் 100 பேர்
தாழ்வான பகுதியில் வசித்தவர்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். ஏர்போர்ட் பின்புறம் நரிக்குறவர்கள் குடியிருப்பில் வசித்த 100க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் மினி பஸ் மூலம் அழைத்து வந்து சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
தொடர் மழை காரணமாக புதுச்சேரி அண்ணா சாலை, காமராஜர் சாலை, நேரு வீதி, இ.சி.ஆர்., உள்ளிட்ட வீதிகள் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. காலை முதல் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக 6:00 மணிக்கு பிறகு, இந்திரா சிக்னல், ராஜிவ் சிக்னல், இ.சி.ஆர்., புஸ்சி வீதி, காமராஜர் சாலை, பெருமாள் கோவில் வீதி என பெரும்பாலான வீதிகள் வெள்ளக்காடாக மாறியது. பல இடங்களில் 2 அடி வரை மழைநீர் தேங்கியது.
மோட்டார் பம்புகள்:
தாழ்வான பகுதியில் தேங்கும் மழைநீர் வெளியேற்ற பொய்யாக்குளம், ரெயின்போ நகர், 45 அடி சாலை, கிருஷ்ணா நகர் 12வது குறுக்கு தெரு பகுதியில் மோட்டார் பம்பு செட் அமைத்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பல இடங்கள் இருளில் மூழ்கியது
பல இடங்களில் மரக்கிளைகள் உடைந்து மின் கம்பிகள் மீது விழுந்து, மின்தடை ஏற்பட்டது. மாலை 5:00 மணி முதல் ஏராளமான இடங்களில் மின் தடை ஏற்பட்டது. புதுச்சேரி நகர பகுதி, முதலியார்பேட்டை, மரப்பாலம் உள்ளிட்ட பல இடங்கள் இருளில் மூழ்கின. மின்துறை ஊழியர்கள் மின்தடையை சரிசெய்ய முயற்சித்தாலும் தொடர் மழை காரணமாக சரிசெய்ய முடியாமல் திணறினர்.
புதுச்சேரி வெள்ளாழர் வீதி பாரதி வீதி சந்திப்பில் தரைக்கு அடியில் செல்லும் மின் கேபிள்கள் இணையும் டிரான்ஸ்பார்மர் பெட்டி திடீரென தீப்பற்றி எரிய துவங்கியது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர்.
கலெக்டர் ஆய்வு
கலெக்டர் குலோத்துங்கள் கடற்கரை சாலை, இ.சி.ஆர்., அவசர கால பேரிடர் மைய வார் ரூம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு பணிகளை துாரிதப்படுத்தினார். கடற்கரை பாதுகாப்பு பணிகளை சீனியர் எஸ்.பி., கலைவாணன் ஆய்வு செய்தார்.
கலெக்டர் குலோத்துங்கன் கூறுகையில், 'வார் ரூம் தயார் நிலையில் உள்ளது. பொதுமக்களின் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 4000 அரசு ஊழியர்கள் பணியில் உள்ளனர். சுற்றுலா தளங்கள், பொழுதுபோக்கு மையங்கள் மூடப்பட்டுள்ளது. ஹோர்டிங் அனைத்தும் அகற்றப்பட்டு வருகிறது. 200 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைத்துள்ளோம்.
அங்கு தங்கும் நபர்களுக்கு உணவு தயார் செய்து கொடுக்கிறோம். பொதுமக்கள் அவசியம் இன்றி வெளியே வர வேண்டாம் என 15 லட்சம் எஸ்.எம்.எஸ்., அனுப்பி உள்ளோம் என, கூறினார்.
9 மணி நேரத்தில் 9.56 செ.மீ., மழை பதிவு

