/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.200 கோடி மோசடி குறித்து திடுக் தகவல்
/
ரூ.200 கோடி மோசடி குறித்து திடுக் தகவல்
ADDED : ஆக 06, 2024 12:04 AM
புதுச்சேரி:வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக, 3,400 பேரிடம், 200 கோடி ரூபாய் மோசடி செய்த வட நாட்டு கும்பல் குறித்து, அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களிடம், மூன்று ஆண்டுகளாக ஆன்லைன் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த வட நாட்டவர் நால்வரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் சமீபத்தில் கைது செய்தனர்.
இவர்கள், நாடு முழுதும், 3,400 பேரிடம் 200 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தது தெரியவந்தது. உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த அசம்கான் தலைமையில் நால்வரும் தனிக்குழுக்களாக செயல்பட்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து, 21 மொபைல் போன்கள், இரு பாஸ்போர்டுகள், 42 சிம் கார்டுகள், ஒரு லேப் டாப், 64 ஏ.டி.எம்., கார்டுகள், 41 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த ஆவணங்களை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்ததில், நேபாளத்தைச் சேர்ந்த, 1,000 பேர் தகவல்களை மோசடி கும்பல் திருடி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி, அண்டை நாடான நேபாளம் வரை மோசடி கும்பல் கைவரிசையை காட்டியிருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.