ADDED : ஆக 05, 2026 09:10 PM
பாகூர்: தாய்வழி ஜாதி சான்றிதழ் வழங்க மறுக்கும் வருவாய் துறையை கண்டித்து, பாகூர் தாலுகா அலுவலகம் முற்றுகை போராட்டம் நடந்தது.
கோர்ட் உத்தரவின் பேரில், புதுச்சேரியில் தாய்வழி பூர்வீகமாக கொண்டு வசித்து வரும் எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., - ஓ.பி.சி., பயனாளிகளுக்கு, அரசின் நலத்திட்டங்கள், கல்வி, வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு பெற்றிடும் வகையில், வருவாய் துறை மூலமாக ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டிற்கான சென்டாக் மாணவர் சேர்க்கைக்கு, தாய்வழி சாதி சான்றிதழ் கேட்டு சென்ற மாணவர்களிடம், வருவாய் துறையினர், தற்போது இச்சான்றிதழ் வழங்க தடை இருப்பதாக கூறி மறுத்துள்ளனர்.
இதனால், மாணவர்களுக்கு, கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. சான்றிதழ் வழங்க மறுக்கும் வருவாய் துறையை கண்டித்து, புதுச்சேரி பூர்வீக பெண்கள் பாதுகாப்பு அமைப்பினர், ஏப்ரல் 14 இயக்க தலைவர் நித்தியானந்தம் தலைமையில், நேற்று பாகூர் தாசில்தார் அலுவலகத்தில் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த பாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்கள், சென்டாக் கடைசி தேதியை சுட்டிக்காட்டி, சென்னை ஐகோர்டில் மாணவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதிபதி, கடந்த 3ம் தேதியன்று, 15 நபர்களுக்கும், 48 மணி நேரத்திற்குள் சாதி சான்றிதழ் வழங்கிட வேண்டும் என உத்தரவிட்டனர். ஆனால், வருவாய் துறை கோர்ட் உத்தரவை மதிக்காமல் உள்ளனர். கோர்ட் உத்தரவு படி உடனடியாக சான்றிதழ் வழங்கிட வேண்டும்’ என்றனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
