தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மார்ச் வரை நீட்டிப்பு: திட்டமிடல் இல்லாததால் மீண்டும் சிக்கல்

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மார்ச் வரை நீட்டிப்பு: திட்டமிடல் இல்லாததால் மீண்டும் சிக்கல்

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மார்ச் வரை நீட்டிப்பு: திட்டமிடல் இல்லாததால் மீண்டும் சிக்கல்


ADDED : ஆக 18, 2024 11:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2024 11:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் செயல்படுத்தப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தினை அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில் தவறுகளை திருத்திக்கொண்டு பெரிய திட்டங்களை விரைவுப்படுத்தி முடிக்க வேண்டும்.

இந்தியாவில் குறிப்பிட்ட நகரங்களை தேர்வு செய்து அங்கு அனைத்து வசதிகளையும் மேம்படுத்தி ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்கும் திட்டம் மத்திய அரசால் 2015ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தில் மூன்றாம் கட்டத்தில் புதுச்சேரிக்கு ஸ்மார்ட் சிட்டியை உருவாக்க மத்திய அரசு கடந்த 2017ல் அனுமதி கொடுத்தது.

அதன்படி புதுச்சேரி நகர பகுதியில் 1,468 ஏக்கர் பரப்பளவில் திட்ட மதிப்பீடு 1,828 கோடி ரூபாயில் பணிகள் நடக்க வேண்டும்.

குறிப்பாக தடையில்லா மின்சாரம், சுத்தமான குடிநீர், கழிவுநீர் பாதாள சாக்கடை வழியாக செல்லுதல், குப்பையில்லா நகரம், மின்விளக்குகளால் ஒளிர செய்தல், கண்காணிப்பு கேமரா, நடைபாதை மேம்பாடு பணிகள் தான் இந்த திட்டத்தின் சிறப்பு அம்சம்.

புதுச்சேரியுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிற மாநிலங்களின் நகரங்கள் இலக்குகளை நிறைவு செய்யும் நோக்கில் நெருங்கி வருகின்றன.

அந்த மாநிலங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் படுவேகத்தில் அரங்கேறி இருக்க புதுச்சேரியில் மட்டும், படு மந்தமாக நடந்து வருகிறது.

ஸ்மார்ட் சிட்டி பணிகள் அனைத்தும் கடந்த ஜூன் மாதத்துடன் முடித்திருக்க வேண்டும். ஆனால் திட்டமிட்டப்படி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் முடிக்காததால் தலைமை செயலர் தலைமையில் விவாதித்த ஸ்மார்ட் சிட்டி குழு அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதி வரை காலக்கெடுவை நீட்டிக்க செய்ய வேண்டும் என, மத்திய அரசிடம் வலியுறுத்தி கடிதம் எழுதி இருந்தது. அதன்படி அடிப்படையில் தற்போது மார்ச் 25ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

எதையும் திட்டமிட்டு காலத்தோடு செய்யாததால் ஸ்மார்ட் சிட்டி திட்டம் சுருங்கியது. அதில் இருந்து அதிகாரிகள் தவறுகளை திருத்திக்கொண்டதாக தெரியவில்லை. இப்போது கூட பெரிய திட்டங்களை விரைவுப்படுத்தாமல் அமைதியாக உள்ளனர்.

புல்வார்டு பகுதி முழுவதும், 40 ஆண்டுகளுக்கு முன், போடப்பட்ட பாதாளசாக்கடையை புனரமைக்க ஸ்மார்ட் சிட்டி திட்டம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு 52 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சாலையை உடைக்காமல் சேதமடைந்துள்ள பாதாள சாக்கடை பைப்புகளை மாற்றுவது, நவீன கேமராக்களை உள்ளே இறக்கி அடைப்புகளை அகற்றி, துார்வர திட்டமிடப்பட்டுள்ளது. ஆனாலும் இன்னும் பணிகள் துவங்கவில்லை.

இதேபோல் கடலுார் சாலையில் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் கட்ட 72 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 55 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் ஏ.எப்.டி., திடலில் புது பஸ்டாண்ட் மாற்றப்பட்ட பிறகு, ரயில்வே மேம்பாலம் கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு கால நீட்டிற்கு செய்திருந்தாலும், மார்ச் 25ம் தேதிக்குள் இப்பணிகள் திட்டமிட்டபடி முடிக்கப்படுமா என்பதே சந்தேகமே.

ஏற்கனவே புதுச்சேரியில் 1,828 கோடிக்கு துவங்கிய ஸ்மார்ட் சிட்டி பணிகள் சரியாத திட்டமிடல் இல்லாததால் கடைசியாக 620 கோடிக்கு சுருங்கிவிட்டது. மத்திய அரசு மனம் இறங்கி இப்போது காலக்கெடு நீட்டித்து உள்ள சூழ்நிலையில், இதற்கு மேல் காலதாமதம் செய்தால், 124 கோடி ரூபாய் இழந்து, 496 கோடிக்கு ஸ்மார்ட் சிட்டி மீண்டும் சுருங்கி விடும் அபாயம் உள்ளது.

இனிமேலாவது விழிப்பாக இருந்து, ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க கவர்னர், முதல்வர், தலைமை செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us