ADDED : ஆக 18, 2024 04:32 AM

புதுச்சேரி அரசு அலுவலகங்களில், சூரிய மின் சக்தியை துவக்க கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன், குஜராத்தில் சப்-கலெக்டராக பணியில் சேர்ந்து, கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர். இவர் குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி, முதல்வராக இருந்த போது, முதன்மை தலைமை செயலராக பணி புரிந்து ஓய்வு பெற்றார். ஓய்விற்கு பின்னரும், கடந்த ஜூன் மாதம் வரை முதன்மை செயலாராக பணி புரிந்தார்.
இந்நிலையில் தான் சமீபத்தில் புதுச்சேரி கவர்னராக நியமிக்கப்பட்டார். குஜராத்தை பொருத்தவரை, சோலார் மின் உற்பத்தியில், மின் மிகை மாநிலமாக உள்ளது. நாட்டிலேயே, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திறனில் குஜராத் முன்னணியில் இருக்க முக்கிய காரணமாக விளங்கியவர் கவர்னர் கைலாஷ்நாதன்.
இந்நிலையில் அவர் தற்போது புதுச்சேரியில் சூரிய மின் சக்தி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இங்குள்ள அனைத்து அரசு அலுவலங்களிலும், சூரிய சக்தி மின் உற்பத்தியை துவக்க உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, இது சம்மந்தமான விரிவான திட்ட மதிப்பீடு அறிக்கையை தயாரிக்கும் பணியை, மின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து அனைத்து அரசு அலுவலக கட்டடங்களில், சூரிய சக்தி மின் உற்பத்தி விரைவில் துவங்க உள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
