/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை குறித்து அவதுாறு
/
ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை குறித்து அவதுாறு
ADDED : ஏப் 23, 2024 04:11 AM
கடலுார், : ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதுாறு கருத்து வெளியிட்ட பா.ஜ., தமிழக தலைவர் அண்ணாமலை மீது மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அடுத்த பக்கிரிமானியத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர்,46; பா.ம.க., ஆதரவாளர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தி.மு.க., பிரமுகரான கலைமணிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 19ம் தேதி ஓட்டு போட்டுவிட்டு வந்த ஜெயக்குமாரின் தம்பி மகள் ஜெயப்பிரியாவை, கலைமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கேலி செய்தனர்.
அதனையறிந்த ஜெயக்குமார், அவரது மனைவி கோமதி,43; மகன்கள் ஜெயபிரகாஷ், சதீஷ்குமார் மற்றும் தம்பி ஜெய்சங்கர் ஆகியோர் கலைமணியை தட்டிக் கேட்டனர். அதில் இருதரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த கலைமணி, மனைவி தீபா, ஆதரவாளர்கள் அறிவுமணி, ரவி, மேகநாதன் உட்பட 10 பேர் சேர்ந்து உருட்டு கட்டையால், ஜெயக்குமார் தரப்பை தாக்கினர். இதில் படுகாயமடைந்த கோமதி இறந்தார். இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் கொலை வழக்கு பதிந்து, கலைமணி உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். மற்ற 5 பேரை தேடிவருகின்றனர்.
பெண் இறந்தது தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'தேர்தலில், தங்கள் கூட்டணிக்கு ஓட்டளிக்கவில்லை என்பதற்காக தி.மு.க.,வினர் இந்த பாதக செயலை செய்திருப்பதாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.பெண் இறப்பு குறித்து அவதுாறு கருத்து வெளியிட்ட தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டி தி.மு.க., நிர்வாகி சாமிநாதன் ஸ்ரீமுஷ்ணம் போலீசில் நேற்று புகார் அளித்தார்.
அதன்பேரில், அண்ணாமலை மீது 153-கலவரத்தை துாண்டுதல், 504-பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், 505-அரசுக்கு எதிராக கலவரத்தை துாண்டுதல் ஆகிய பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்,கோமதி கொலை வழக்குதொடர்பாக அவதுாறு செய்தி பரப்பியதாக தி.மு.க., மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு பிரிவு அமைப்பாளர் சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில் அம்புஜவல்லி பேட்டை குழந்தைவேல் மகன் சண்முகம், ஹரி பிரபாகரன், சின்ஹா ஆகியோர் மீதுஸ்ரீமுஷ்ணம் போலீசார் மூன்று பிரிவுகள் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

