ADDED : ஆக 24, 2024 06:07 AM
புதுச்சேரி: லாஸ்பேட்டையில் சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை பிடித்து 650 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
லாஸ்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் குறிஞ்சி நகர் விரிவாக்கம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபரை பிடிக்க முயற்சித்தபோது தப்பியோட முயன்றார். போலீசார் அவரை மடக்கி, சோதனை செய்தனர்.
அவரது பாக்கெட்டில் பிளாஸ்டிக் கவர்களில் 650 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. விசாரணையில், அவர், லாஸ்பேட்டை குறிஞ்சி நகர், எம்.ஓ.எச்., வீதியைச் சேர்ந்த பிரவீன், 27; என்பதும், அப்பகுதி சிறார்கள் மற்றும் கல்லுாரி மாணவர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய மறைத்து வைத்திருந்ததும் தெரிந்தது.
பிரவீனை போலீசார் கைது செய்து, கஞ்சா, மொபைல்போன், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.