/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வர் அறிவிப்பு செயல்பாட்டிற்கு வரவில்லை
/
முதல்வர் அறிவிப்பு செயல்பாட்டிற்கு வரவில்லை
ADDED : ஆக 12, 2024 04:56 AM
அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு
புதுச்சேரி: வவுச்சர் ஊழியர்களுக்கு ரூ. 18 ஆயிரம் சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு செயல்வடிவத்திற்கு வரவில்லை என, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை;
சட்டசபையில் நீண்ட விவாத்திற்கு பிறகு முதல்வர் அறிவிப்புக்கு செயல்வடிவம் கொண்டு வருவது துறை சார்ந்த செயலர், தலைமை செயலரின் கடமை. முதல்வரின் சட்டசபை அறிவிப்புகள் செயல்வடிவம் பெறவில்லை என்றால் அரசு மீது மக்கள் நம்பிக்கை இழப்பர்.
மக்கள் நலன்சார்ந்த அறிவிப்புகள், தினக்கூலி, பகுதி நேர ஊழியர்கள் சம்பந்தமான அறிவிப்புகள் முதல்வர் அறிவித்தார். அரசு துறைகளில் 10 ஆண்டு காலம் பணி செய்த அனைத்து ஊழியர்களும் அந்தந்த துறையில் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என, முதல்வர் சட்டசபையில் அறிவித்தார்.
அதுபோல் பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட வவுச்சர் ஊழியர்கள் மீண்டும் பணி அமர்த்தப்படுவர். 10 ஆயிரம் சம்பளத்தில் பணிபுரியும் வவுச்சர் ஊழியர்களின் சம்பளம் ரூ. 18 ஆயிரமாக உயர்த்தப்படும் என அறிவித்தார். ஆனால் முதல்வர் அறிவிப்பு இன்று வரை நடைமுறைக்கு வரவில்லை.
கடந்த 2015ம் ஆண்டு கதிர்காமம் மருத்துவமனையில் சேர்ந்த ஊழியர்கள் நிரந்த ஊழியராக எப்படி மாற்றம் செய்யப்பட்டினரோ அதே வழியில் மற்ற துறைகளில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை பணி நிரந்தரம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.