மின்சாரம் தாக்கி 2 பேர் பலி விக்கிரவாண்டி அருகே சோகம்
மின்சாரம் தாக்கி 2 பேர் பலி விக்கிரவாண்டி அருகே சோகம்
ADDED : ஜூன் 04, 2026 06:51 PM
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே மின்சாரம் தாக்கி பெண் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த உள்ள இளையாண்டிபட்டு கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார், 55; இவர், தனது தம்பி பண்டரிநாதனின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, மல்லிகை பூ சாகுபடி செய்து வந்தார். நேற்று காலை அய்யனார், அவரது மனைவி காமாட்சி, 48; அதே ஊரைச் சேர்ந்த செல்வம் மனைவி சாந்தி, 43; ஆகிய 3 பேரும் பூ பறிப்பறித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, நிலத்தில் ஏற்கனவே அறுந்து கிடந்த மின் கம்பியை சாந்தி மிதித்துள்ளார். அவர் மீது மின்சாரம் பாய்ந்து அலறியதைப் பார்த்து அருகிலிருந்த அய்யனார் சாந்தியை பிடித்து காப்பாற்ற முயன்றார்.
இதில் அய்யனார் உடலிலும் மின்சாரம் பாய்ந்ததில், இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். காமாட்சி லேசான காயத்துடன் தப்பினார். சம்பவத்தின்போது சத்தம் கேட்டு, அருகிலிருந்த விவசாயிகள் ஓடி வந்து மின் இணைப்பை துண்டித்தனர்.
விக்கிரவாண்டி போலீசார் விரைந்து சென்று, சாந்தி, அய்யனார் ஆகிய இருவரது உடல்களையும் மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த காமாட்சி, அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
