வைத்திலிங்கம் எம்.பி., கேள்விக்கு மத்திய மின்துறை அமைச்சர் பதில்
வைத்திலிங்கம் எம்.பி., கேள்விக்கு மத்திய மின்துறை அமைச்சர் பதில்
ADDED : ஜூலை 23, 2026 05:11 PM
புதுச்சேரி: லோக்சபாவில் புதுச்சேரி எம்.பி., வைத்திலிங்கம் எழுப்பிய கேள்விகளுக்கு, மத்திய மின்துறை அமைச்சர் மனோகர் லால் பதில் அளித்து பேசினார்.
காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., லோக்சபாவில், கோடைக்காலத்தில் அதிகரித்து வரும் மின்சாரத் தேவை, எல் நினோ உள்ளிட்ட வானிலை மாற்றங்களால் உருவாகும் சவால்கள், நிலக்கரி கிடைப்புத் தன்மை, மின்சார விநியோகப் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒருங்கிணைப்பு மற்றும் நாட்டின் நீண்டகால எரிசக்தி பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து கேள்விகளை எழுப்பினார்.
அதற்கு, மத்திய மின்துறை அமைச்சர் மனோகர் லால் பதிலளித்து பேசுகையில் ‘2026 ஜூன் நிலவரப் படி நாட்டின் மொத்த நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறன் 548.86 ஜிகாவாட் ஆக உயர்ந்துள்ளது. எல் நினோ தாக்கத்தால் மின்சாரத் தேவை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. 2026 ஏப்ரல் முதல் ஜூன் வரை உச்சபட்ச மின் தேவை கடந்த ஆண்டை விட 12 சதவீதம் உயர்ந்துள்ளது. 2026 மே மாதத்தில் 270.8 ஜிகாவாட் என்ற நாட்டின் வரலாற்றிலேயே அதிகபட்ச உச்ச மின் தேவை வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டது.
தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்ய போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பசுமை ஆற்றல் வழித்தடத் திட்டம், கடல்சார் காற்றாலைத் திட்டம், உயர் திறன் சூரிய ஒளிமின்னழுத்த தொகுதிகளுக்கான உற்பத்தி ஊக்கத் திட்டம், மின்சார வாகன சார்ஜிங் கட்டமைப்பு, பேட்டரி மின் சேமிப்பு அமைப்புகளுக்கான நிதி இடைவெளி நிரப்பும் திட்டம், நீரேற்று மின் சேமிப்புத் திட்டங்கள் மற்றும் எரிசக்தி சேமிப்பு அமைப்புகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள் மூலம் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பையும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாற்றத்தையும் வலுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
