டூவீலர்கள் மீது வேன் மோதல் வழுதாவூர் சாலையில் பரபரப்பு
டூவீலர்கள் மீது வேன் மோதல் வழுதாவூர் சாலையில் பரபரப்பு
ADDED : ஜூலை 12, 2026 06:51 PM
புதுச்சேரி: வழுதாவூர் சாலையில் நேற்று நடந்த சாலை விபத்தில், பெண் ஒருவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
புதுச்சேரி, வழுதாவூர் சாலையில் நேற்று மதியம், 2:15 மணியளவில், மாருதி ஆம்னி வேன் (பிஒய்01ஆர்7949) ஒன்று மேட்டுப்பாளையம் நோக்கி சென்றது. தட்சணாமூர்த்தி நகர் அருகே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார், எதிர் திசையில் வந்த சொக்கநாதன்பேட்டை ஜெயக்குமரன் மற்றும் அவரது மனைவி தெய்வமணி வந்த ஸ்கூட்டர் மீதும், தொடர்ந்து அங்கு நிறுத்தியிருந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீது மோதி விட்டு, ைஹமாஸ் விளக்கு கம்பத்தில் மோதி நின்றது.
இந்த விபத்தில், ஸ்கூட்டரில் வந்த தெய்வமணியின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இது குறித்து வடக்கு பகுதி போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். விசாரணயைில் காரை ஓட்டி வந்தது, உரிமையாளரான சுல்தான்பேட்டை முகமது காசிம் என்பதும், அவர் ஆடுகளை இறைச்சி கடைகளுக்கு சப்ளை செய்துவிட்டு, வீடு திரும்பும்போது, விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது.
பிசியான வழுதாவூர் சாலையில் கார் அடுத்தடுத்து மூன்று இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
