/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் வசந்த உற்சவம் துவக்கம்
/
பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் வசந்த உற்சவம் துவக்கம்
ADDED : மே 18, 2024 06:14 AM

புதுச்சேரி : பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் வசந்த உற்சவம் நேற்று துவங்கியதை முன்னிட்டு, சீதா - ராமர் புஷ்ப பந்தலில் சேவை சாதித்தனர்.
புதுச்சேரி அடுத்த பஞ்சவடீயில் 36 அடி உயர ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, பட்டாபிஷேக ராமச்சந்திரமூர்த்திக்கு வசந்த உற்சவம் நேற்று (17ம் தேதி) துவங்கி, நாளை 19ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. விழா நடக்கும் மூன்று நாட்களும் மாலை 5:00 மணிக்கு, வசந்த மண்டபத்தில் சீதா பிராட்டியுடன் ராமர் எழுந்தருள்கிறார்.
இதையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு மூலவர் ராமச்சந்திர மூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு வசந்த மண்டபத்தில் ராமர் - சீதாபிராட்டிக்கு, விசேஷ திருமஞ்சனம் நடந்தது. பின், புஷ்ப பந்தலில் சேவை சாதித்தனர்.
இரண்டாம் நாளான இன்று (18 ம் தேதி) மாலை 5:00 மணிக்கு வசந்த மண்டபத்தில் ராமர்- சீதாவுக்கு திருமஞ்சனத்தை தொடர்ந்து, பழப்பந்தலில் சேவை சாதிக்கின்றனர். நாளை (19ம் தேதி) காலை 6:00 மணிக்கு ராமச்சந்திரமூர்த்திக்கு சிறப்பு அலங்காரம், காலை 10:00 மணிக்கு சீதா - ராமர் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
மாலையில் வசந்த மண்டபத்தில் விசேஷ திருமஞ்சனம், தொடர்ந்து, காய்கறி பந்தலில் சீதா- ராமர் சேவை சாதிக்கின்றனர்.

