ADDED : ஏப் 10, 2024 02:54 AM
புதுச்சேரி, : தேசிய கட்சிகள் வேட்பாளர்கள், தலைவர்கள் வருகையைஎதிர்பார்த்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி லோக்சபா தேர்தலில் 7 அரசியல் கட்சி, 19 சுயேச்சைகள் என மொத்தம், 26 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த லோக்சபா தேர்தலில் காங்., - பா.ஜ., அ.தி.மு.க., நாம் தமிழர் என நான்குமுனை போட்டி ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 19 ம் தேதி ஓட்டு பதிவு நடக்க உள்ள சூழ்நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அ.தி.மு.க., வேட்பாளரை தமிழ்வேந்தனை ஆதரித்து தமிழக எதிர்கட்சி தலைவர் பழனிச்சாமி பிரசாரம் செய்தார். இந்த உற்சாகத்துடன் அ.தி.மு.க., தீவிரமாக ஓட்டு சேகரித்து வருகின்றது.
அடுத்து காங்., வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து கடந்த 7 ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் பொதுகூட்டத்தில் பிரசாரம் செய்தார்.
இதனால் காங்., வேட்பாளரை எப்படியும் வெற்றிப்பெற செய்ய வேண் டும் என தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் தீவிர மாக களத்தில் இறங்கியுள்ளன.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து நாளை 11ம் தேதி மாலை 6 மணிக்கு சிங்கார வேலர் திடலில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அக்கட்சி தலைவர் சீமான் பிரசாரம் செய்கிறார். அதனால் கட்சியினரும் உற்சாகமடைந்துள்ளனர்.
ஆனால், லோக்சபா தேர்தலில் முதல்முறையாக நேரடி போட்டி ஏற்பட்டுள்ள தேசிய கட்சிகளான காங்., - பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து தங்களது கட்சி தலை வர்கள் பிரசாரத்திற்கும் இன்னும் வராதது இருகட்சியினர் மத்தியிலும் சோர்வையினை ஏற்படுத்தி யுள்ளது. தேர்தலும் களை கட்டாமல் உள்ளது.
லோக்சபா தேர்தலில் பா.ஜ., போட்டியிட்டாலும், பிரசாரத்தில் முதல்வர் ரங்கசாமி, தன் கட்சி வேட்பாளர் போட்டியிட்டதைபோன்றே தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
காங்., - அ.தி.மு.க., குற்றச்சாட்டுகளுக்கு ரங்கசாமியே பிரசாரத்தில் நேரடியாக பதிலடித்து கொடுத்து வருகிறார்.
அத்துடன் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் வெற்றிப் பெற்றால் மத்திய அமைச்சராக பதவி ஏற்பார். ஆனால் காங்., வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு போடும் ஓட்டு எந்த பிரயோஜனமும் இல்லை என காட்டமாக விமர்சித்தும் ரங்கசாமி ஓட்டு சேகரித்து வருகிறார்.
நமச்சிவாயத்திற்கு மத்திய அமைச்சர் பதவி என்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் புதுச்சேரிக்கு ஒருமுறை வந்து உறுதியளித்துவிட்டால் போதும், வெற்றி சுலபமாகும் என பா.ஜ., - என்.ஆர்.காங்., கருதுகிறது.
அதேவேளையில், பா.ஜ.,விற்கு புதுச்சேரி வரும் காங்., தலைவர்கள் மூலம் பிரசாரத்தில் பதிலடி கொடுக்க காங்., நினைக்கின்றது. வைத்திலிங்கம் வெற்றிப் பெற்றால் புதுச்சேரிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
அவர் மத்திய அமைச்சராவார் என்று ராகுல், சோனியா, மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்ட காங்., தலைவர்கள், புதுச்சேரிக்கு வந்து, ஒருமுறை வந்து உறுதியளித்துவிட்டால், பா.ஜ., - என்.ஆர் காங்., பிரசாரத்திற்கு தக்க பதிலடியாக இருக்கும். வெற்றிக்கும் அடித்தளமாக இருக்கும் என காங்., கருதுகிறது.
புதுச்சேரிக்கு வர உள்ள காங்., - பா.ஜ., நட்சத்திர பேச்சாளர்கள் அடங்கிய தலைவர்கள் பட்டியல் இந்திய தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துள்ளன.
பா.ஜ., தரப்பில் பிரதமர் மோடி, நட்டா, ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிர்மலா சீத்தராமன், குஷ்பு, தமிழிசை சவுந்திராஜன், ராஜா உள்பட மொத்தம் 40 தலைவர்கள் புதுச்சேரிக்கு வர உள்ளதாக பட்டியலை கொடுத்துள்ளது.
இதேபோன்று, காங்., கட்சி, சோனியா, ராகுல், பிரியங்கா, முகுல் வாஸ்னிக், அழகிரி, இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட 20 தலைவர்கள் புதுச்சேரிக்கு வருவதாக பட்டியலை கொடுத்துள்ளது.
லோக்சபா தேர்தல் பிரசாரம் வரும் 17 ம்தேதியுடன் நிறைவுபெறுகிறது.
பிரசாரத்திற்கே இன்னும் ஒரு வார காலமே உள்ள சூழ்நிலையில் புதுச்சேரிக்கு இரு கட்சிகளின் தலைவர்கள் வருவார்களா. இல்லையா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், இரு கட்சி வேட்பாளர்களும் தொண்டர்களும் தங்களது தலைவர்கள் புதுச்சேரிக்கு பிரசாரம் செய்ய வருவார்கள் என நம்பிக்கையுடன், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

