ADDED : ஜூன் 05, 2026 09:12 PM
புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் மரக்கன்று நடும் இயக்கத்துடன், உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியை, ஜிப்மர் கல்வி முதல்வரும், பொறுப்பு இயக்குநருமான விக்ரம் கடே மரக்கன்று நடும் பணியை துவங்கி வைத்து பேசுகையில் ‘பசுமை நிறைந்த மற்றும் மாசு இல்லாத வளாகத்தை உருவாக்கும் நோக்கில் ஜிப்மர் ஆண்டு முழுதும் பல்வேறு நிலையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வருங்கால தலைமுறைகளுக்காக இயற்கையை பாதுகாக்க அனைவரும் பங்களிக்க வேண்டும்’ என்றார்.
துணை இயக்குநர் ரங்கபாஷ்யம், திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரேம்ராஜன், மூத்த நிதி ஆலோசகர் வர்ஷிணி அருண், மூத்த நிர்வாக அலுவலர் ஹவாசிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஜிப்மர் தோட்டக்கலை கண்காணிப்பாளர் சக்திவேல் பேசுகையில், ‘ஜிப்மர் இயக்குநர் வீர் சிங் நேகியின் வழிகாட்டுதலின் கீழ், மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளின் தொடர்ச்சியாக இந்த மரக்கன்று நடும் இயக்கம் நடைபெறுவதாக தெரிவித்தார். கடந்த ஆண்டு இதே முயற்சியின் ஒரு பகுதியாக 2,000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு, ஜிப்மர் வளாகத்தின் பசுமைப் பரப்பை கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், மருத்துவர்கள், பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பலர் வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான தங்களது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியை, ஜிப்மர் தோட்டக்கலைத் துறை ஏற்பாடு செய்திருந்தது.
