ADDED : மே 06, 2026 09:54 PM
இப்பகுதியில் கடந்த 29 ம் தேதி கீழ் முதுகு வலிக்கான யோகா சிகிச்சை முறைக ள் குறித்து பார்த்தோம். இனி, பெண்களின் ஆரோக்கியத்திற்கான யோகா சிகிச்சை குறித்து காண்போம்.
இன்றைய வாழ்வியல் முறையில் பெண்கள், ஆண்கள் எதிர்கொள்ளும் பிற பிரச்னைகள் மட்டுமன்றி பெண்களுக்கான பிரச்னைகள் மற்றும் ஹார்மோன் கோளாறு போன்ற பல உடல் நலப் பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். இதில், பல பிரச்னைகளை யோகா செய்வதன் மூலம் தவிர்க்கலாம்.
இயல்பாக பெண்கள் அனைத்து யோகா பயிற்சிகளையும் செய்யலாம். ஆனால், மாதவிடாயின் போது சர்வாங்காசனம், ஷிரசாசனம் உள்ளிட்ட பிற கடினமான ஆசனங்கள், மற்றும் கருப்பை, வயிற்றில் அழுத்தம் கொடுக்கும் ஆசனங்களை தவிர்க்க வேண்டும்.
பத்த கோணாசனம்
கால்களை முன்னால் நீட்டி தரையில் அமர்ந்து கொள்ளவும். வலது காலை மடக்கி, குதிகால் உங்கள் மூலாதாரத்திற்கு அருகில் இருக்குமாறு வைத்து பாதத்தை உள்நோக்கி கொண்டு வர வேண்டும். பின்னர் இடது காலை மடக்கி, இரு பாதங்களும் ஒன்றையொன்று தொடுமாறு கொண்டு வர வேண்டும்.
கைகளால் இரு பாதங்களையும் பிடித்துக் கொண்டு, தொடையை முடிந்தவரை தரையை தொட முயற்சிக்கவும். முதுகெலும்பு முடிந்தவரை நேராக வைத்துக் கொண்டு, கண்களை மூடி இடுப்பு பகுதியில் கவனத்தை செலுத்தியபடி, குதத்தை சிறிது நேரம் இறுக்கி பின் தளர்த்தவும். பின்னர் இந்த நிலையில் இருந்து மெதுவாக விடுவித்து, உத்தான ஆசனத்தில் கால்களை முன்னோக்கி நீட்டி ஆழமாக சுவாசிக்கவும்.
பத்தகோணகிரியா: கால்களை முன்னால் நீட்டி தரையில் அமரவும். பத்த கோணாசனத்தில் செய்தது போல் இரு கால்களின் குதிகால்களும் உங்கள் மூலாதாரத்திற்கு அருகில் கொண்டு வந்து இரு பாதங்களும் தொடுமாறு வைக்கவும். பின்னர் கைகளை தொடை மீது வைத்து, முட்டியை பட்டாம் பூச்சி இறக்கை போல் மெதுவாக, மேலும் கீழும் அசைக்கவும். இவ்வாறு சில சுற்றுகளை செய்த பின், உங்கள் கைகளால், உங்கள் பாதங்களை பிடிக்கவும். பின்னர் இந்த நிலையில் இருந்து மெதுவாக விடுவித்து, உத்தான ஆசனத்தில் கால்களை முன்னோக்கி நீட்டி ஆழமாக சுவாசிக்கவும்.
அஸ்வினி முத்திரை:: அஸ்வினி முத்திரை ஒரு எளிய மற்றும் பயனுள்ள பயிற்சியாகும். இது உடல், மன மற்றும் ஆன்மிக நன்மைகளை அளிக்கிறது. இந்த முத்திரை அனைத்து அமர்ந்த நிலையில் செய்யலாம். மூல பந்தம் அதாவது ஆசன வாயை சுருக்கி, விரிப்பதன் மூலம் செய்யப்படுகிறது.
பிரணவ பிராணாயாமம்:: இது ஓம்கார ஒலியை அடிப்படையாக கொண்டது. இது உடல், உணர்ச்சிகள் மற்றும் மனதை ஒத்திசைக்கிறது. வயிறு அல்லது கீழ்மார்பு சுவாசம் என்னும் ஆதம் பிராணயாமம் செய்ய கைகளின் முத்ரையை கீழ் நோக்கி தொடையில் வைக்கவும். கீழ் மார்பிலிருந்து ஆழமாக மூச்சை உள்ளிழுத்து ஆ... என்ற ஒலியுடன் மூன்று முறை செய்யவும்.
இதேபோன்று நடு மார்பு சுவாசம் எனும் மத்ய பிராணயாமம் செய்ய, விரல்களை உள் நோக்கி மடக்கி சின்மய முத்திரையை செய்யவும். முத்திரையை கீழ் நோக்கியவாறு தொடை மீது வைத்து உங்கள் நடு மார்பில் ஆழமாக மூச்சை உள்ளிழுத்து பின்னர் ஊஊஊ என்ற ஒலியுடன் மூச்சை வெளியிட வேண்டும்.
அதியம் பிராணாயாமம் எனும் மேல் மார்பு சுவாசம் செய்ய கை கட்டை விரலை மையத்தில் வைத்து மற்ற விரல்களை மூடி இறுக்குங்கள். முத்திரையை தொடை மீது கீழே வைத்து, மேல் மார்பு பகுதியில் ஆழமாக சுவாசிக்கவும். பின்னர் ம்ம்ம்..... என்ற ஒலியுடன் மூச்சை விடவும்.
இந்த மூன்று பகுதிகளையும் ஒரு முழுமையான யோகா சுவாசத்தாலை இணைத்தால் நான்காவது நிலை மகத்யோகா பிராணாமமாகும். ஆதி முத்திரையை செய்த பின் தொப்புளுக்கு முன் மடித்த விரல்கள் மேல்நோக்கிய நிலையில் மூடிய கை விரல்கள் ஒன்றை ஒன்று தொடுமாறு வைக்கவும். இதுவே பிரம்ம முத்திரை ஆகும். இந்நிலையில் கீழ், நடு மற்றும் மேல் மார்ப்பு பகுதிகளில் ஆழமாக சுவாசித்து, ஆ... ஊ... ம்... என்ற சத்தத்துடன் மூச்சை வெளிவிட வேண்டும்.
பாக்ஸ்.,
பயன்கள்:
பத்த கோணாசனம் மற்றும் பத்தகோணகிரியா செய்வதால், மூல நோய் மற்றும் பிறப்புறுப்பு இறக்கத்தால் பாதித்தவர்களுக்கு பயனாக இருக்கும். மேலும், இடுப்பில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து மாதவிடாய் மற்றும் பாலியல் பிரச்னைகளை சரி செய்ய உதவுகிறது.
அஸ்வினி முத்திரை முழு நரம்பு மண்டலத்தையும் உற்சாகப்படுத்துகிறது. மேலும், மூல நோய் மற்றும் மலக்குடல், பிறப்புறுப்புகள் பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வு காணலாம்.
