ADDED : மே 31, 2026 06:30 PM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே இளைஞர் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருக்கோவிலுார் கீழையூரைச் சேர்ந்தவர் சூரியகுமார் மகன் சதீஷ், 29; எலக்ட்ரீஷியன். இவரது சகோதரர்கள் சங்கர், சம்பத். மூவருக்கும் திருமணமாகவில்லை. சதீஷ் தனது தாய் லட்சுமி, 80; உடன் மணம்பூண்டி,பி.டி.ஓ., ஆபிஸ் தெருவில் தனியாக வீடு வாடகை எடுத்து வசித்து வந்தார்.
நேற்று அதிகாலை ஒரு மணிக்கு வீட்டிற்கு வந்த சதீஷ், அவரது தாயிடம் நான் சாப்பிட்டு விட்டேன் நீ துாங்கு என கூறிவிட்டு தனது அறைக்கு சென்று கதவை தாழிட்டு கொண்டார். நேற்று காலை 6:00 மணி ஆகியும் சதிஷ் வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த லட்சுமி அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை திறந்து பார்த்தபோது, தனது இரண்டு கைகளிலும் மின் ஓயரை சுற்றிக் கொண்டு மின்சாரத்தை பாய்ச்சி சதிஷ் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
தகவல் அறிந்த அரகண்டநல்லுார் போலீசார், சதிஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
