ADDED : நவ 28, 2025 04:35 AM
புதுச்சேரி: ஒதியஞ்சாலை போலீசார் நேற்று முன்தினம் இரவு சோனாம்பாளையம் சந்திப்பில் வாகன சோதனை நடத்தினர். அவ்வழியாக ஸ்கூட்டியில் வேகமாக வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர், கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில் குண்டுபாளையம், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த சீனிவாசன், 30; என்பதும், மாணவர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா விற்றதும் தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 70 கிராம் கஞ்சா மற்றும் ஸ்கூட்டியை பறிமுதல் செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இதேபோல், மங்கலம் போலீசார் நத்தமேடு பகுதியில், ரோந்து சென்றபோது, புதுகுப்பம் சாலை சிமென்ட் களம் அருகே சிறுவர், இளைஞர்களுக்கு கஞ்சா விற்று கொண்டிருந்த கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த அய்யனார், 25; என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அய்யனார் மீது அடித்தடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

