/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசுப் பள்ளியில் சுவர் விழுந்து 3 மாணவர்கள் காயம்
/
அரசுப் பள்ளியில் சுவர் விழுந்து 3 மாணவர்கள் காயம்
ADDED : பிப் 13, 2025 05:09 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு பள்ளியில், குடிநீர் குழாய் சுவர் இடிந்து விழுந்ததில், 3 மாணவர்கள் காயமடைந்தனர்.
புதுச்சேரி தவளக்குப்பம் அடுத்த புதுக்குப்பத்தில் அரசு தொடக்க பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 1991ம் ஆண்டு கட்டப்பட்ட பள்ளியில், 1 முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்கள் படித்து வருகின்றனர். வகுப்பறை கட்டடங்கள் பழுதடைந்து, ஆங்காங்கே விரிசல் விழுந்துள்ளதுடன், பல இடங்களில் மேற்கூரையும் காரைகள் பெயர்ந்து கம்பிகள் தெரிகிறது.இது தொடர்பாக, பெற்றோர் பல முறை கல்வித்துறைக்கு தகவல் தெரிவித்தும், கட்டடங்களை சீரமைக்கவில்லை.
இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் பள்ளி துவங்கியது. பள்ளி வளாகத்தில், மாணவர்கள் கை கழுவ 5 குடிநீர் குழாய்கள் பொருத்தப்பட்ட சுவர் உள்ளது.மாணவர்கள், அங்கு கை கழுவ சென்றபோது, குடிநீர் குழாய் பொருத்தப்பட்டிருந்த சுவர் திடீரென இடிந்து, மாணவர்கள் மீது விழுந்தது. இதில், மாணவி தர்ஷிகா, 10; மாணவர்கள் பவின், 8; பவன்குமார், 8; ஆகியோர் காயமடைந்தனர்.மாணவர்களை ஆசிரியர்கள் மீட்டு, தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை, சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் நேரில் சந்தித்து, ஆறுதல் கூறினர். மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.
இதனையடுத்து, சபாநாயகர் செல்வம், சுவர் இடிந்து விழுந்த பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.அப்போது, கல்வித்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, பள்ளி கட்டடத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.
விபத்து குறித்து, கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், 'குடிநீர் குழாய் பொருத்திய சுவர் பழமையானது என்பதால் இடிந்து விழுந்துள்ளது.
விபத்து குறித்து, விசாரணை நடத்த கூறியுள்ளேன். தற்காலிகமாக வகுப்புகளை வேறு இடத்திற்கு மாற்றி, பள்ளி கட்டடத்தை சீரமைக்கவும், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்' என்றார்.

