பயங்கர ஆயுதங்களுடன் வாலிபரை தாக்க காத்திருந்த 4 பேர் கைது
பயங்கர ஆயுதங்களுடன் வாலிபரை தாக்க காத்திருந்த 4 பேர் கைது
ADDED : மார் 15, 2026 04:34 AM
திருக்கனுார்: திருக்கனுார் அருகே முன்விரோதத்தில் வாலிபரை தாக்க பயங்கர ஆயதங்களுடன் வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கனுார் அடுத்த வாதானுார், வடக்கு தெருவைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன், 32; கார் டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் பணி முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்குள்ள வங்கி அருகில் 5 பேர் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நின்று கொண்டிப்பதை பார்த்து நீங்கள் யாரு என்று விசாரித்துள்ளார்.
இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்த திருக்கனுார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் தப்பியோட முயன்றது. ஆனால் போலீசார் அவர்களில் 4 பேரை மடக்கி, விசாரித்தனர்.
அவர்கள் தமிழக பகுதியான அம்மனன்குப்பம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார், 23; மதன்குமார், 20; கொடுக்கூரைச் சேர்ந்த செல்வம், 23; ராதகிருஷ்ணன், 22; ஆகியோர் என, தெரியவந்தது. இவர்கள் முன் விரோதத்தில் சோம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஜெயந்தன் என்ற வாலிபரை பயங்கர ஆயுதங்களுடன் தாக்க வந்தது தெரிந்தது.
இதையடுத்து அவர்கள் நால்வரையும் போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய செல்லிப்பட்டு தமிழ், 26, என்பவரை தேடி வருகின்றனர்.
