புதுச்சேரியில் கொள்ளை அடிக்க திட்டமிட்ட 5 பேர் அதிரடி கைது
புதுச்சேரியில் கொள்ளை அடிக்க திட்டமிட்ட 5 பேர் அதிரடி கைது
ADDED : மார் 24, 2026 10:53 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் கொள்ளை அடிக்க கத்தியுடன் பதுங்கியிருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, கோரிமேடு, காஸ் குடோன் லாரி முனையத்தில் 10 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக நேற்று முன்தினம் இரவு தன்வந்தரி நகர் போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது, போலீசாரை கண்ட அந்த கும்பல் தப்பி செல்ல முயன்றது.
அதில், 5 பேர் தப்பி ஓடிய நிலையில், 5 பேரை மட்டும் போலீசார் விரட்டி பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் கத்திகள், இரும்பு கம்பிகள், குரங்கு முகமூடிகள் மறைத்து வைத்திருந்தனர்.
விசாரணையில், நைனார்மண்டபம், சுதானா நகரை சேர்ந்த கணபதி மகன் மாதேஷ், 22; சாரம், குயவர்பாளையம் கோவிந்த நாயக்கர் தெரு குப்புசாமி மகன் அன்புமணி, 23; சின்னையன்பேட்டை, கங்கையம்மன் தெரு அறிவாளன் மகன் ஆகாஷ், 23; பழைய சாரம், சோழன் தெரு சுரேஷ்குமார் மகன் விஜயராகவன், 20; சாரம், சக்தி நகர் துரைசிங்கம் மகன் ஹரி (எ)ஹரிபிரசாத், 20, ஆகியோர் என, தெரியவந்தது.
அவர்கள் தொழிலதிபர்கள், வணிகர்கள் மற்றும் லாரி உரிமையாளர்களை வழிமறித்து, குரங்கு முகமூடி அணிந்து, கத்திகள், இரும்பு கம்பிகளால் தாக்கி கொள்ளையடிக்கும் நோக்கத்தில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது.
அவர்கள், 5 பேரையும் கைது செய்த போலீசார், 3 கத்திகள், 2 இரும்பு கம்பிகள், 5 குரங்கு முகமூடிகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் கஞ்சா விற்பனை, கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.
5 பேரையும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய சாரம், தென்றல் நகர் சைலேஷ், கோட்டக்குப்பம் ஸ்ரீதர், உருளையன்பேட்டை ராகுல், தஞ்சாவூர் அபி, சாரம் வெங்கடேஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
