குழந்தை தொழிலாளர்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் 7 குழந்தைகள் மீட்பு
குழந்தை தொழிலாளர்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் 7 குழந்தைகள் மீட்பு
ADDED : ஏப் 24, 2026 08:13 PM

புதுச்சேரி: குழந்தை தொழிலாளர்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் 7 குழந்தைகள் மீட்கப்பட்டு, காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணைய தலைவர் சிவராமன் தெரிவித்தார்.
அவர், கூறியதாவது:
புதுச்சேரியில் 18 வயத்திற்கு கீழ் உள்ள குழந்தைகளின் உரிமைகளை பாதுகாத்தல், கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்துவது, மாநிலத்தில் போக்சோ சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணிகளை ஆணையம் செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, குழந்தைகள் உரிமை மீறல், பாலியல் சீண்டல், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், கடத்தல், குழந்தை திருமணம் உள்ளிட்ட குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் எங்கு நடந்தாலும், அங்கு மாநில குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் விரைந்து செயல்பட்டு, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும்.
தற்போது புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் போக்சோ சட்டம், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டம் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த மார்ச் 1ம் தேதி முதல் 3 மாதத்திற்குள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் 12 வயது உடைய மாணவிகளுக்கு இலவசமாக நாப்கின் வழங்க வேண்டும். பள்ளி மாணவிகளுக்கு தனியாக கழிப்பறை வசதி இருக்க வேண்டும். நாப்கினை அப்புறப்படுத்த அதற்கான இயந்திரம் கட்டாயம் வைக்கப்பட வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அதனை மாநில குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் அனைத்து பள்ளிகளிலும், சுகாதாரத்துறை, கல்வித்துறையுடன் இணைந்து கண்காணித்து அறிக்கை தயார் செய்து வழங்க வேண்டுமென கூறியுள்ளது.
அதன்படி, கடந்த வாரம் காரைக்கால், திருநள்ளார் அரசு பள்ளியில் ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து, கலெக்டர் இஷிதா ரதி தலைமையில் காரைக்காலில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், அதனை தடுக்கும் முறைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
மேலும், புதுச்சேரியில் உள்ள குழந்தைகள் காப்பகங்கள் ஆய்வு செய்த போது, அங்கு சில பிரச்னைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, குறைபாடுகள் உள்ள 5 காப்பகங்களை மூடுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குழந்தை திருமணம் நடக்க கூடாது என்பதற்காக 100 நாள் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
குழந்தை தொழிலாளர்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் 4 குழுக்கள் அமைக்கப்பட்டு, தொழிற்சாலைகள், கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. அதில், 7 குழந்தைகளை மீட்கப்பட்டு, காப்பகங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து பள்ளிகளிலும் போக்சோ கமிட்டி அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.
