ADDED : மார் 13, 2026 06:24 AM

புதுச்சேரி: கோரிமேட்டில் உள்ள அரசு ஊழியர் காப்பீட்டு கழக (இ.எஸ்.ஐ.சி) மருத்துவமனையின் 75வது ஆண்டு வைர விழா மற்றும் சர்வதேச மகளிர் தின விழா நடந்தது.
உதவி மருத்துவக் கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி ராமகிருஷ்ணன் வரவேற்றார். உணவியல் நிபுணர் சூசன் நோக்கவுரை ஆற்றினார். செவிலியர் அதிகாரி தேவிஸ்ரீ தொகுத்து வழங்கினார்.
புதுச்சேரி வரதட்சணை தடுப்பு ஆலோசனைக் குழுத் தலைவர் வித்யா ராம்குமார் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். இ.எஸ்.ஐ.சி., துணை இயக்குநர் சித்ரா, மருத்துவக் கண்காணிப்பாளர் சிவக்குமார் ஆகியோர் 75வது ஆண்டு சாதனைகளை விளக்கி கூறி, மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தனர்.
மண்டல வாரிய உறுப்பினர் ரத்தினவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, நோயாளிகளுக்கு வினாடி - வினா, பணியாளர்களுக்கு கோலம் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தோல் மருத்துவ நிபுணர் ஐஸ்வர்யா நன்றி கூறினார்.
கடந்த 24 முதல் 10ம் தேதி வரை நடந்த வைர விழாவையொட்டி, வெளி நோயாளிப் பிரிவில் சிகிச்சை பெற வந்த நோயாளிகளுக்கு உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது.
