ADDED : மே 11, 2025 04:06 AM

புதுச்சேரி: புதுச்சேரி கம்பன் கழகம் சார்பில், கம்பன் கலையரங்கத்தில் நடந்து வரும் 58ம் ஆண்டு கம்பன் விழாவில், 2ம் நாளான நேற்று பட்டிமன்றம் நிகழ்ச்சி நடந்தது.
விழாவில், காலை 9 மணிக்கு இளையோர் அரங்கம் நடந்தது. கம்பன் இசையமுது சிவதாசன், அறக்கட்டளை நிறுவனர்கள் பழனி அடைக்கலம், சுகுமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வீரபாலாஜி தலைமையில் 'கம்பனில் நான் கண்ட ராமன்' என்ற தலைப்பில் இளையோர் அரங்கம் நடந்தது.
தலைவனாக சுரேகா, தோழனாக ஹேம வர்த்தினி, பரம்பொருளாக தீபக் பேசினர்.
காலை 10:15 மணிக்கு மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ஜே.வி.எஸ்.அறக்கட்டளை சார்பில், பரிசு வழங்கப்பட்டது. 10:45 மணிக்கு சச்சிதானந்தம் முன்னிலையில் வழக்காடு மன்றம் நடந்தது. நடுவராக சுதாசேஷய்யன் பங்கேற்க, சுக்ரீவனோடு வாலி பகை கொண்டது குற்றம் என்ற வழக்கை கவிதாஜவகர் தொடுத்தார். எழிலரசி மறுத்தார்.
மாலை 5:00 மணிக்கு கவியரங்கம் நடந்தது. காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர். கலைமாமணி சரோஜா திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். 'கம்பன் போற்றும் மாண்பு' என்ற தலைப்பில் நடைபெறும் கவியரங்கிற்கு கவிதை பித்தன் தலைமை தாங்கினார். தங்கம்மூர்த்தி, கோவிந்தராசு, இளங்கோவன் ஆகியோர் கவிதை வாசித்தனர்.
மாலை 6:30 மணிக்கு சிவகொழுந்து, ராமலிங்கம் சகோதரர்கள் அறக்கட்டளை சார்பில் பட்டிமன்றம் நடந்தது. அறக்கட்டளை நிறுவனர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். இலங்கை ஜெயராஜ் நடுவராக செயல்பட்டார்.
ஒப்பற்ற தியாகம் செய்தவர் இந்திரஜித்தே என்ற தலைப்பில் மகாசுந்தர், முருகேசன். வாசுதேவா. மாரீசனே என்ற தலைப்பில் பாரதி, பூங்குழலி பெருமாள். சரவண செல்வன், கும்ப கர்ணனே என்ற தலைப்பில் அறிவொளி, வைஜெயந்தி ராஜன், யோகேஷ்குமார் ஆகியோர் வாதாடினர். நிறைவு விழா இன்று நடக்கிறது.
