தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஜிப்மர் எதிரே ரூ.2.4 கோடியில் நடை மேம்பாலம்

 ஜிப்மர் எதிரே ரூ.2.4 கோடியில் நடை மேம்பாலம்

 ஜிப்மர் எதிரே ரூ.2.4 கோடியில் நடை மேம்பாலம்


ADDED : மே 25, 2026 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 25, 2026 05:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையின் எதிரே, பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பிற்காக ரூ. 2.4 கோடி மதிப்பில் புதிய நடை மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ நிறுவனமாக விளங்கும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு, புதுச்சேரி மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். தினசரி வெளிநோயாளி பிரிவுக்கு மட்டுமே 5,000க்கும் மேற்பட்டோர் குவிகின்றனர்.

இதுமட்டுமன்றி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட இதர தென் மாநிலங்களில் இருந்தும் உயர் சிகிச்சைக்காக ஏராளமானோர் ஜிப்மரை நாடுகின்றனர். இதனால் ஜிப்மர் மருத்துவமனையின் நுழைவாயில் பகுதி எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படுகிறது.

அதிவேகமாக வாகனங்கள் செல்லும் கோரிமேடு பிரதான சாலையைக் கடப்பது, இங்கு வரும் நோயாளிகளுக்கும், முதியவர்களுக்கும், அவர்களுடன் வரும் உதவியாளர்களுக்கும் பெரும் சவாலாகவே இருந்து வந்தது. போக்குவரத்து நெரிசலும், விபத்து அபாயமும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், இங்கு பாதுகாப்பாக சாலையை கடக்க வழிவகை செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது.

அதிகரித்து வரும் மக்கள் நடமாட்டத்தைக் கருத்தில் கொண்டு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடை மேம்பாலப் பணியைத் கையில் எடுத்து விறுவிறுப்பாக நடத்தி வருகிறது. இரும்பு கட்டமைப்பைக் கொண்டு மிகவும் உறுதியான முறையில் 31 மீட்டர் நீளத்திற்கு இந்த நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

படிக்கட்டுகளில் ஏறி இறங்க சிரமப்படும் நோயாளிகள் மற்றும் முதியவர்களுக்காக, பாலத்தின் இரு பக்கங்களிலும் அதிநவீன லிப்ட் வசதி செய்யப்படவுள்ளது. சாலையின் ஒரு பக்கத்தில் உள்ள லிப்ட் அல்லது படிக்கட்டுகள் வழியாக மேலே ஏறி, பாலத்தின் வழியே சாலையைக் கடந்து, மறுபுறம் உள்ள லிப்ட் மூலம் பாதுகாப்பாகக் கீழே இறங்கிவிடலாம்.

இதுவரை 75 சதவீத பணிகள் முடிந்துள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்குள் அனைத்து பணிகளும் நிறைவடைந்து பாலம் திறக்கப்படும் போது, ஜிப்மர் பகுதி போக்குவரத்து நெரிசலின்றி மாறுவதுடன், நோயாளிகளின் பாதுகாப்பான பயணமும் உறுதியாகும்.

ஒருவழியாக பஞ்சாயத்து தீர்ந்தது

ஜிப்மர் எதிரே மேம்பாலம் கட்டுவதில் நீண்ட நாட்களாக ஒருமித்த கருத்து எட்டப்படாமல் முட்டுக்கட்டை நீடித்து வந்தது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அங்கு நடை மேம்பாலம் கட்டலாம் என்று திட்டமிட்டது. ஆனால், ஜிப்மர் நிர்வாகமோ பாதசாரிகள் சாலையின் அடியில் சென்று கடக்கும் வகையில் சப்-வே அமைக்கலாம் என்று கருதியது. இந்த இருவேறு கருத்துகளால் திட்டம் தொடங்குவதில் தொடர்ந்து இழுபறி நீடித்தது. இதனால், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. ஆனால், தற்போது நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு, ஜிப்மர் நிர்வாகமும் தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளன. அதன் பலனாகவே, தற்போது இந்த நடை மேம்பாலப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி, மக்கள் பயன்பாட்டிற்குத் தயாராகி வருகிறது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us