கூடப்பாக்கம் ரயில்வே கேட்டில் பள்ளம் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி
கூடப்பாக்கம் ரயில்வே கேட்டில் பள்ளம் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி
ADDED : ஏப் 26, 2026 08:50 PM

வில்லியனுார்: கூடப்பாக்கம் ரயில்வே கேட்டில் தண்டவாளத்தை சரிசெய்ய தோண்டிய பள்ளத்தால் வாகன ஓட்டிகள் விழுந்து வாரி செல்கின்றனர்.
கூடப்பாக்கம், ரயில்வே கேட்டில் ரயில்வே துறையினர் சாலையில் பெரிய அளவில் பள்ளம் எடுத்து, தண்டவாள பகுதியை மேம்படுத்தும் பணியை மேற்கொண்டனர். இதனால் தார் சாலையை விட, தண்டவாள பகுதி மேடாக மாறியது. இதனால் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் ரயில்வே கேட் தண்டவாள பகுதியை கடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் விழுந்து வாரி செல்கின்றனர்.
மேலும் பொருட்களை ஏற்றி வரும் டாடா ஏஸ் உள்ளிட்ட சிறிய வேன்கள், தண்டவாளத்தை கடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
ரயில்வே கேட் பகுதியில் தற்போது மேடு, பள்ளமாக இருப்பதால் அவ்வப்போது, வாகனங்களில் இருந்து பொருட்கள் சரிந்து விழுந்து சிறு சிறு விபத்துகளும் தினமும் நடந்து வருகிறது. சாலையை விட தண்டவாள பகுதி மேடாக மாறிவிட்டதால், வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டி உள்ளதால் அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்படுகிறது.
காலை மற்றும் மாலை நேரங்களில் தனியார் கல்லுாரி மற்றும் பள்ளி வாகனங்கள் அதிக அளவில் இந்த வழித்தடத்தில் செல்வதால் மணிக்கணக்கில் நேரம் விரையமாகி பொதுமக்களும், வேலைக்கு செல்லுவோரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி கூடப்பாக்கம் ரயில்வே கேட் தண்டவாள பகுதியில் உள்ள மேடு பள்ளத்தை ரயில்வே துறையினர் விரைந்து சீரமைக்க வேண்டும்.
