தங்க நகைகள் ஏற்றி வந்த வேன் பறக்கும் படை சோதனையால் பரபரப்பு
தங்க நகைகள் ஏற்றி வந்த வேன் பறக்கும் படை சோதனையால் பரபரப்பு
ADDED : மார் 25, 2026 07:42 AM

புதுச்சேரி: புதுச்சேரியில், தங்க நகைகள் ஏற்றி வந்த மினி வேனை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ஜி.ஆர்.டி., நகை கடையில் இருந்து, புது டிசைன் நகைகளை எடுத்துக் கொண்டு புதுச்சேரி ஜி.ஆர்.டி., நகை கடைக்கு மினி வேன் வந்தது. நேற்று மதியம் 2:30 மணியளவில் கோரிமேடு எல்லையில் வந்த வேனை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது, நகைக்கான உரிய ஆவணங்கள் இருந்ததால், வேனை அனுப்பி உள்ளனர்.
பின், அந்த வேன் புதுச்சேரி நகைக்கடையில் புதிய நகைகளை இறக்கிவிட்டு, அங்கிருந்து பழைய டிசைன் நகைகளை ஏற்றிக்கொண்டு சென்னை திரும்பியது. அந்த மினி வேன் சாரம் அவ்வை திடல் வழியாக சென்றபோது, அங்கு ரோந்து பணியில் இருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரி அர்ஜூன் ராமகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள், வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் நகைக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் வேனை தட்டாஞ்சாவடி தேர்தல் துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று நகைகளை சோதனை செய்தனர். இதற்கிடையில் நகைக்கான உரிய ஆவணங்களை நகை கடை சார்பில் கொடுக்கப்பட்டு, அதனை சரிசெய்யும் பணியில் தேர்தல் துறை அதிகாரிகள் ஈடுப்பட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது.
