ADDED : மே 21, 2026 06:43 AM
புதுச்சேரி: புதுச்சேரி ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள், குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் வளாகத்தில் இரண்டு நாள் நடைபெற்ற வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் 2025--2026 தேசிய முகாமில் பங்கேற்று பெருமை சேர்த்துள்ளனர்.
அறிவியல் திறன் தேடல் தேர்வுகளில் பங்கேற்ற ஆதித்யா பள்ளியின் 8 ம் வகுப்பு மாணவர் சிவராம் மேனன், 9 ம் வகுப்பு மாணவி ஷாலினி ராஜ், பத்தாம் வகுப்பு மாணவன் அனிருத்தா மூவரும் மாநில அளவில் முதலிடத்திலும், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர் ஆகஸ்டஸ் மேக்ஸ்வெல், ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர் விஷ்ணு மற்றும் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர் அக்ஷய கண்ணன் ஆகிய மூவரும் மாநில அளவில் இரண்டாம் இடத்திலும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாநில அளவில் தேர்ச்சி பெற்ற மாணவர் விஷ்ணு மற்றும் அக்ஷய கண்ணன் ஆகிய இருவரும் குஜராத் மாநிலத்தில் நடந்த தேசிய முகாமில் நடைபெற்ற தென் மண்டல போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்று, பள்ளிக்கும் புதுச்சேரிக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்களை ஆதித்யா பள்ளி நிறுவனர் ஆனந்தன், தாளாளர் அசோக் ஆனந்த், ஸ்ரீ வித்ய நாராயணா அறக்கட்டளை ட்ரஸ்டி அனுதா பூனமல்லி ஆகியோர் பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.
