ADDED : செப் 09, 2026 08:14 PM
புதுச்சேரி: புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலஉரிமையாளர்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நேற்று துவங்கியது.
புதுச்சேரி விமான நிலையம், லாஸ்பேட்டையில் 182 ஏக்கர் பரப்பளவில், 1,500 மீட்டர் ஓடுபாதையுடன் உள்ளது. இங்கு சிறிய ரக விமானங்கள் மட்டுமே தரையிறங்க முடியும். இதனால் பெரிய ரக விமானங்கள் வந்து செல்லும் வகையில், 2,300 மீட்டர் நீளமுடைய புதிய ஓடுபாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்காக புதுச்சேரி பகுதியில், 185 ஏக்கர் நிலம், தமிழகப் பகுதியில், 203 ஏக்கர் நிலம் என, மொத்தம் 388 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில், கையகப்படுத்தப்படும் நில உரிமையாளர்கள் கருத்து கேட்பு கூட்டம், லாஸ்பேட்டை அசோக் நகர் சமுதாய நலகூடத்தில் நேற்று துவங்கியது. நாளை (11ம் தேதி) வரை காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இக்கூட்டம் நடக்கிறது.
நேற்று நடந்த முதல்நாள் கூட்டத்தில், ெஹப்சிபா தலைமையில் அருள், கணேசன், ரேவதி, காளமேகம் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டு நில உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில், நில உரிமையாளர்கள் தங்கள் தேவையானவற்றை உரிய படிவத்தில் நிரப்பி தந்தால், அதிகாரிகளிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆலோசனை குழுவினர் தெரிவித்தனர். தொடர்ந்து, விண்ணப்ப படிவங்களை விவசாயிகளுக்கு வழங்கினர்.
தமிழக விவசாயிகள் வருகை:
விமான நிலைய விரிவாக்க குழுவினர் கருத்து கேட்பு கூட்டம் லாஸ்பேட்டை அசோக் நகர் சமுதாய நல கூடத்தில், நடப்பதை அறிந்த தமிழக பகுதி விவசாயிகளும் பங்கேற்க வந்தனர். இதனையறிந்த ஆலோசனை குழுவினர் தமிழக பகுதி விவசாயிகளுக்கு, தனியாக ஆலோசனை கூட்டம் நடக்கும் என, தெரிவித்தனர். இதையடுத்து, அவர்கள் புறப்பட்டு சென்றனர்.
அடிப்படை வசதிகள் இல்லை:: கருத்துக் கேட்பு கூட்டம் நடந்த சமுதாய நலக்கூடத்தில், மைக் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடுகள் செய்யவில்லை. இதனால், நில உரிமையாளர்கள் அதிகாரிகள் கூறியதை சரியாக கேட்க முடியாமல் அவதிப்பட்டனர்.
